8 November 2012

இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.
1. மூலாதார சக்கரம்
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையிம் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.

2. சுவாதிஷ்டான சக்கரம்
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

3. மணிபூரக சக்கரம்
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

4. அனாகத சக்கரம்
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

5. விசுத்த சக்கரம்
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.

6. அஜ்ந சக்கரம்
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும்,காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.

7. சகஸ்ரார சக்கரம்
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.

ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன. அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.

இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம். நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை யோகாபயிற்சியும், மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.

இந்த பயிற்சிகளால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.

இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் ஆற்றலை (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.

No comments:

Post a Comment