youtube

31 August 2015


சதுரகிரியின் மேல் அமைந்துள்ளது சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம் என நான்கு லிங்கத் திருமேனிகள் இம்மலையில் அமைந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு நகரிலிருந்து தாணிப்பாறை கிராமம் சென்று, அங்கிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் நடைப் பயணம் மேற்கொண்டால் சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயத்தை அடையலாம். அடர்ந்த மரங் களுக்கிடையே மலையேறிச் செல்லும் சிரமமான பயணம் என்றாலும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் ஏராள மான பக்தர்கள் அந்தப் பரமனை தரிசிக்கச் செல்கின்றனர். அபூர்வ மூலிகைகளின் மணம், மருத்துவ குணம் கொண்ட புனிதத் தீர்த்தங்கள் என பக்தர்களுக்குப் புத்துணர்வூட்டும் அம்சங்கள் பலவுண்டு.

அகத்தியருக்கு ஈசன் தன் திருமணக் கோலத்தைக் காட்டி அருளிய தலங்களில் இதுவும் ஒன்று. அப்போது அம்மையப் பருடன் பிரம்மா, மகாவிஷ்ணு, இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், கின்னரர், கிம்புருடர் என அனைவரும் இங்கு வந்த தால் இது பூலோக கைலாயம் எனப்படுகிறது. இங்கே வந்து பிறப்பதற்காக வானோர்கள் தவம் செய்கின்றனராம்.

""சிதம்பரம் சென்று வணங்கியோருக்கு முக்தி கிட்டும்; திருவாரூரில் பிறப்போருக்கு முக்தி கிட்டும்; காசியில் இறப்போருக்கு முக்தி கிட்டும்; நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை. இந்த சதுரகிரித் தலமோ மேற்சொன்ன நான்கு வகை முக்திகளையும் தரவல்லது. முற்பிறப்பில் செய்த பாவங்கள் உட்பட அனைத்து பாவங்களையும் தீர்க்கும் தலமிது. இங்குள்ள சஞ்சீவி மூலிகையின் காற்றால் ஆயுள் விருத்தியும் உண்டாகும்'' என்கிறார் சுந்தர மகாலிங்கர் ஆலய அர்ச்ச கர் வாலசுந்தர சுவாமிகள்.

சிந்து நாட்டு அரசன் சந்திரஹாசன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கடும் பாவங்களைச் செய்து வந்தான். நாளடைவில் உன்மத்தம் பிடித்தவனாக தெருக்களில் அலையத் தொடங்கினான். பெருங்கவலையில் மூழ்கிய அவன் மனைவியும் குடும்பத்தாரும் முனிவர்களிடம் சென்று ஆலோசனை கேட்க, "சதுரகிரி சென்று புனிதத் தீர்த்தங் களில் நீராடி சிவனை வழிபட்டால் விமோசனம் உண்டாகும்' என்றனர். அதன் படியே  அந்த மன்னனை சதுரகிரிக்கு அழைத்து வந்த அவன் மனைவியும் உறவினரும், அவனைப் புனிதத் தீர்த்தங்களில் நீராடச் செய்து உபவாசமிருந்து இறைவனை வழிபடச் செய்தனர். சிவனருளால் மன்னனின் சித்தப் பிரம்மை நீங்கியது. இழிகுணங்களும் மறைந்தன. பின்னர் தன் நாடு சென்று நீதி தவறாமல் ஆண்டு வந்தான் என்கிறது தலபுராணம்.

மேலும், கண்டவர் வெறுக்கும்படி குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டு பெருந் துன்பத்தில் உழன்ற மாளவ நாட்டு மன்னன் சோமசீதளனும் இங்கே வந்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றானாம்.

""இவை ஆறுகள், இவை மூலிகைகள், இவை பொய்கைகள், இவர்கள் மனிதர்கள், இவர்கள் தேவர்கள், இது மலை என்று எதையும் பிரித்துப் பார்க்க இயலாதபடி எல்லாமே சிவசொரூபமாக விளங்குகிறது இந்த சதுரகிரித் தலம்.

இங்கிருக்கிற சந்திர தீர்த்தம், கௌடின்ய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், நாக கன்னித் தீர்த்தம், குளிராட்டித் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராடி, ஈசனை மனமுருக வழிபட்டால் பரமானந்த நிலை கிட்டும். "சுந்தர மகாலிங்காய' என்னும் மந்திரம் அனைத்து பாவங்களையும் போக்கும். புரட்டாசி மாத நவராத்திரியின்போதும், அமாவாசையுடன் கூடிய திங்கட் கிழமையிலும் இங்கு வழிபட்டால், மற்ற தலங்களில் செய்த 32 தருமத்தின் பலன் கிட்டும். இவையெல்லாம் ஓலைச்சுவடிகளில் கிடைத்த தகவல்கள்'' என்கிறார் தம்பிப்பட்டி சுந்தர பரதேசியார்.

அகத்தியருக்குக் காட்சி தந்ததோடு, பச்சைமால் என்னும் ஆயர்குலச் சிறுவனுக் காக இங்கே லிங்க வடிவில் எழுந்தருளியவர் சுந்தர மகாலிங்கம். உமையவளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப் பெற்ற மூர்த்தியே சந்தன மகாலிங்கம். ஆனந்த சுந்தரம் -ஆண்டாளம்மாள் தம்பதிக்கு அர்த்த நாரீஸ்வரர் கோலம் காட்டிய மூர்த்தியே இரட்டை லிங்கம்.

அன்னை ஆனந்த வல்லி என்னும் திருப் பெயரோடு அருளாட்சி புரிகிறாள். பதினெண் சித்தர்கள் வாழ்ந்த தலமாதலால் அவர்களுக் கும் இங்கே சந்நிதியுண்டு. சந்தன மகாதேவி மற்றும் பரவைக் காளி, சந்தன விநாயகர், சந்தன முருகன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல சந்நிதிகள் இங்கே உண்டு.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாத அமா வாசை மற்றும் பௌர்ணமி, மார்கழித் திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள்.

ஏட்டில் அடங்காத எண்ணிறந்த அற்புதங்களோடு திகழும் சதுரகிரி மலைக்கு நேரில் சென்றால் தான் அதை உணர  முடியும்