youtube

5 January 2013



லக்கினத்தில் கிரகங்கள்


லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். லக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, லக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன்,சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் லக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் லக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். லக்னம் சரராசியாகி, நவாம்ச லக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் லக்கினாதிபதி சர லக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு லக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான  சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். லக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும். அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும்  லக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும்.
ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் லக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும்.  செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் லக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.
ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் லக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும்
குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள்
சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ லக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம்.
சூரியனோ அல்லது லக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். லக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.
பொதுவாக நல்ல கிரகங்கள் லக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் லக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீட்டை வைத்து எந்தெந்த பலங்களைக் கூறலாம் என்பதைப் பார்ப்போம்.
2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை
பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான்
கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், Liquid Cash என்று சொல்லக் கூடிய கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் கிடையாதா? உண்டு. இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடு
2-ம் வீடு அல்லவா? ஆக 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.
4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா லக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்க்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகையவற்றயும் கூறமுடியும்

No comments: