youtube

11 January 2017

ஸ்ரீசக்கர மகாமேரு

ஸ்ரீசக்கர மகாமேரு

நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள். குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை:

மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும் விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார். ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.

சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம். அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .

முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை:

ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.

ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.

பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்ததாக,

தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா
யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:

என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
பாசாங்குசபுஷ்பபாணசாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி
ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே

ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே – என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)

ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
ஓம் சிரோ தேவ்யை நம:
ஓம் சிகா தேவ்யை நம:
ஓம் கவச தேவ்யை நம:
ஓம் நேத்ர தேவ்யை நம:
ஓம் அஸ்திர தேவ்யை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் பகமாலியை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் பேருண்டாயை நம:
ஓம் வன்னிவாசின்யை நம:
ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் த்வரிதாயை நம:
ஓம் குலசுந்தர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீல பாதகாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் சித்ராயை நம:
ஓம் லலிதா மகாநித்யாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி

என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.

ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.

ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்

(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).

அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

சக்கர மகிமையைப் பாடுவோம்:

சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க
பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்

வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.

திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள்

திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.

திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.

அவர் வடிவம் எடுத்தோ அல்லது வடிவம் எடுக்காமல் அரூபமாக கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபம் நாளன்று அவர் சிலருக்கு காட்சிக் கொடுத்ததாக கூட கூறப்படுவது உண்டு. அந்த சித்த புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டாலே போதும், நம் பாவங்கள் விலகி, நம் ஆத்மா தூய்மைப் பெற்றுவிடும்.

அது மட்டுமல்ல அந்த சித்தரின் தரிசனப் பாக்கியம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது இடைக்காடர் பற்றி நினைத்தப்படி செல்லுங்கள். அவர் ஆசி வேண்டும் என்று கேளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக இடைக்காடர் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணா மலையில் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள்.

வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.

எனவே கிரிவலம் செல்லும் போது ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரையும் நினைத்துக் கொண்டே நடந்தால் நல்லது நடக்கும். சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணாமலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. கிரிவலம் செல்லும் போது, “ஸ்ரீ உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலை ஈசனே போற்றி” என்று வணங்கி விட்டு “ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம்” என்று சொல்லி பூக்களைத் தூவி வழிபட வேண்டும்.

கிரிவல பக்தர்களின் காலில் அந்த பூக்கள் படாதபடி சாலையோரமாக நன்கு உள்ளே தள்ளி பூக்களை தூவி அந்த சித்தரை நினைத்து வழிபட வேண்டும். இப்படி வழிபாடு செய்தால் ஸ்ரீபெத்த நாராயண சித்தர் ஏராளமான நற்பலன்களை அள்ளித்தருவார் என்கிறார்கள். அதுபோல சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார்.

மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும். திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார்.

மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும்.

மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும். இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும். அடுத்த தடவை நீங்கள் கிரிவலம் செல்லும் போது யாராவது ஒரு சித்தர் பற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்து பாருங்கள். அடுத்த பவுர்ணமி கிரிவலத்துக்கு நீங்கள் செல்லும் முன்பு நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து இருக்கும்...

ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. அதன் விவரம் வருமாறு :


ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன
நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. அதன் விவரம் வருமாறு :

சூரியன் ....................ஆரோக்கியம், தலைமைப் பதவி.
சந்திரன் ...................கீர்த்தி, சிந்தனாசக்தி.
அங்காரகன் ............. செல்வம், வீரம்.
புதன் ....................... அறிவு, வெளிநாட்டு யோகம், நகைச்சுவை உணர்வு.
வியாழன் .................. நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல்.
சுக்கிரன் ................... அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை.
சனி .......................... சந்தோஷம், ஆயுள் விருத்தி.
ராகு .......................... பகைவர் பயம் நீங்குதல், பண வரவு அதிகரித்தல்.
கேது ........................ குல அபிவிருத்தி.

எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.
இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.
செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.
நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.