youtube

28 January 2014

ஆல்ஃபா

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.
சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'
"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'
"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'
"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.
"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.
இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் 
தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது. 
மூலாதாரம்
நமது மூளையில் உள்ள "சஹஸ்ராமம்" என்னும் ஒரு துருவம். கீழே ஆண்குறிக்கும், குதத்திற்கும் இடைப்பட்ட மூலாதாரம் இன்னொரு துருவம். கீழ் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மேலெழும்பி, மேல் மூலாதாரத்தை அடைகிறது என்கின்றனர் யோகிகள்.
குண்டலினியின் வடிவம்
குண்டலம் என்றால் வட்டம் என்று பொருள். எல்லா மனிதர்களின் உடல்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி. பாம்பு வடிவில் சுருண்டு படுத்திருக்கும். மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணத்துக்கு அடங்கி நடக்கும் ஆற்றல் என்பதால், குண்டலினி முக்கோண வடிவிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி பிரபஞ்ச சக்தியாக கூறப்படுகிறது. அண்டமும் (உலகமும்) பிண்டமும் (உடல்) குண்டலினியே. பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது. இந்த அணு சக்தி மாபெரும் ஆற்றலுடையது - இதனால் அணு குண்டுகள் செயல்படுகின்றன. இந்த சக்தி அணுவை 'பிரிக்கும்' போது உண்டாகும் சக்தி பிரபஞ்சத்தை போல், உடலும் 'அணுக்கள்' நிறைந்தது. யூரேனியம் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களிலிருந்து அணு சக்தி அடையப்படுவது போல, உடலில் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ள குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.

குண்டலினி மேலெழும்பும் பாதைகள் 
உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.
ஆறு மலர்கள்
அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால்

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறது. கௌரவம் கெடும்படி ஏதாவது செய்ய வைக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு. கண் பார்வையில் குறை தரும். தேவை இல்லாமல் விரையம் செய்கிறது. கோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வந்து, மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள். லக்கினத்திற்கு 3-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். அதிக அலைச்சலை கொடுக்கும். பயணம் அதிகம் உண்டு. தற்பெருமை பேச வைக்கும். மகாதைரியம் தரும். லக்கினத்திற்கு 4-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவை. வீடு-மனை நிதானமாக அமையும். கல்வி தடை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று சம்மந்தப்பட்ட தொல்லை கொடுக்கும். தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும். லக்கினத்திற்கு 5-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு நிதானமாக காலங்கடந்து கொடுக்கும். மனஉலைச்சல் உண்டாகும். நித்திரையை கெடுக்கும். தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும். லக்கினத்திற்கு 6-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும். தேவை இல்லா கடன் பெருக செய்யும். ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும். எதிரிகளை உருவாக்கும். கவனமும், நிதானமும் தேவை. லக்கினத்திற்கு 7-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும். கல்யாணம், காலங்கடந்து நடக்கும். நண்பர்களால் விரையங்கள் உண்டு. அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. கூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும். லக்கினத்திற்கு 8-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடி கொடுக்கும். ஆனால் ஆயுளுக்கு பயமில்லை. வழக்கு வீண் விவாதங்கள் உண்டாக்கும். எச்சரிக்கை தேவை. மறைமுக தொல்லைகள் வரும். லக்கினத்திற்கு 9-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை உருவாக்கும். சொத்து வாங்கும் விஷயத்தில் வில்லங்கம் உண்டாக்கும். மேல் படிப்பு சற்று தடைசெய்யும். தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும். லக்கினத்திற்கு 10-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவை இல்லா பிரச்சினை உண்டாக்கும். முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும். வாக்கு பலிதம் கொடுக்கும். லக்கினத்திற்கு 11-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்ய வைக்கும். உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிக்க வைக்கும். சதா சிந்தனையை தூண்டும். தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும். அயல்நாடு விஷயத்தால் செலவு வைக்கும். லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும். செலவுகள், விஷம் போல ஏறும். பக்தி அதிகரிக்க செய்யும். நன்மைகள் செய்தாலும், தீமைகள் வந்தடையும். மனச்சஞ்சலம் உண்டாகும்.