youtube

3 October 2016

யோகம்

யோகம்

யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்ற பொருளே சொல்லப்படுகிறது. உண்மையில் யோகம் என்றால் சேர்க்கை என்பதே பொருள்.

பஞ்சாங்கத்தில் யோகம் என்பது சூர்ய்சந்த்ரர்களின் ஸ்புடத்தை குறிப்பதாகும்.

அதிருஷ்டம் என்றால் கண்ணுக்கு தெரியாதது என்ற பொருள். விரும்பத்தக்க நிகழ்வுகளின் கண்ணுக்கு தெரியாத காரணம் என்ற பொருளில் இந்த வார்த்தை வழங்கப்படுகிறது.

த்ருஷ்டாந்தமாக என்றால் பார்க்க கூடிய என்ற பொருள்.
அத்ருஷ்டம் எனில் பார்க்க இயலாத என்ற பொருள். உண்மையில் விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமும் அதிருஷ்டமே! நம்ம ஆட்கள் அதன் முன்னே துர் என்ற பதத்தை சேர்த்துவிட்டார்கள். துரதிர்ஷடம்.
சூரியனின் சஞ்சாரம் தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தக்ஷினாயனம் என்றும் சொல்லப்படும்.

உத்த்ராயனம் திருவோண நட்சத்திரத்தில் சூர்ய சஞ்சாரத்தின் பொழுதும் தக்ஷினாயனம் பூசத்தில் சூர்ய சஞ்சாரத்திலும் ஆரம்பிக்கும்.

இந்த இரு நட்சத்திரங்களில் இருந்தும் சூர்ய சந்திரர் தனிதனி அல்லது சேர்ந்து நிற்கும் ஏதேனும் ஒரு பொழுதின் நிலையை கணக்கிட்டு அதை யோகம் என்று சொல்லப்படுகிறது.

உள்ளபடி சந்திரனின் தாராகணப்ரவேசத்தால் நட்சத்திர மாதம் 27 1/3 நாட்கள் உடையதாகிறது. இதற்கு சமமான யோக மாதம் சுமார் 25 ½ நாட்கள் வியாபகமாகும்.
யோகத்தின் அளவு 13 பாகை 20 கலை
திதியின் கால அளவு 12 பாகை என்பதை நினைவு கூர்க.

சூரியனில் இருந்து சந்திரன் செல்லும் தூரம்.
சூர்ய சந்திரர்களின் ஸ்புடங்களின் வித்யாசம் திதி. அவற்றின் கூட்டல் யோகம்.

இப்படி சொல்லப்பட்ட யோகங்கள் 27.
 இதன்றியும் பஞ்சாங்கத்தில் அமிர்தாதி யோகங்களும் உண்டு அவை வாரம் நட்சத்திர சேர்க்கையாகும். இந்த கிழமையில் இன்ன நட்சத்ரம் என்ற விஷயம் அது. அத்ற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

திதிகள் போல யோகங்களுக்கும் பலன்கள் உண்டு.திடியை பொறுத்தவரை நித்யா தேவியரின் வந்தனை தோஷங்கள் அகற்ற வல்லது.
தீய யோகங்கள் என்று ஒரு 9 யோகங்களை சொல்கின்றனர். இந்த யோகங்களில் பிறந்தோருக்கு நல் வாழ்வு இல்லை என்றே ஜாதக நூல்கள் சொல்கின்றன.
இந்த யோகங்களின் அதி தேவதையை வணங்கி பார்ப்பதை தவிர வேறெதுவும் வழி இல்லை.

60 நாழிகை=360 பாகை=24 மணி நேரம்
1 நாழிகை=6 பாகை= 24 நிமிஷம்
60 வினாடி=1 நாழிகை
30 வினாடி= ½ நாழிகை=3 பாகை
60 விகலை-1கலை
60கலை-1 பாகை
ஓம் குருவே துணை

கர்மவினைகளைத் தீர்க்க உதவும் வெறும் ஒருநாள் பைரவ மந்திரஜபம்

தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படம் ஒன்றை லேமினேசன் செய்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.புகைப்படத்தை கிழக்கு நோக்கி வைக்கவும்;புகைப்படத்தின் அருகில் வடக்கு நோக்கி எரியுமாறு ஒரு நெய்தீபம் ஏற்றவும்;பத்தி ஏற்றிவைக்கவும்.படையலாக டயமண்டு  கல்கண்டு,மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை படையலாக வைக்கவும்;காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பின்வரும் பைரவர் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.ஒரு மணி நேரத்துக்கு 10 முதல் 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி ஒரே ஒரு நாள் சொன்னாலே,நமது கர்மவினைகள் அனைத்தும் நசிந்துபோகும்.இந்த ஒரே ஒரு நாளில் வேறு எவரிடமும் பேசுவதைத் தவிர்க்கவும்.போனை,தொலைபேசியை,டிவியை,கணினியை மற்றும் அனைத்து தகவல் தொடர்புசாதனங்களையும் அணைத்துவிடவும்.முடிந்தவரையிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்;இயலாதவர்கள் பசும்பாலும்,வாழைப்பழமும் சாப்பிடலாம்.அல்லது ஒருவேளை உணவு அருந்தலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இந்த பைரவ மந்திரஜபம் நிறைவடைந்த சில நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்கள் குறைந்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள்.ஒருவேளை அப்படி உணரமுடியாவிடில் மேலும் ஓரிரு நாட்களுக்கு இதேபோல் பைரவ மந்திர ஜபம் செய்யலாம்.இதன்  மூலமாக,இப்பிறவியில் அனைத்து கர்மவினைகளையும் தீர்த்துவிட்டு,நிம்மதியும்,செல்வ வளமும் பெற முடியும்.போட்டோ வைக்காமல்,அருகில் இருக்கும் பைரவ ஆலயம் அல்லது சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் இவ்வாறு வழிபாடு செய்யலாம்.

மர்மம் நிறைந்த சதுரகிரி தைலக் கிணற்றை கண்டறியும் ரகசியம்!

மர்மம் நிறைந்த சதுரகிரி

தைலக் கிணற்றை கண்டறியும் ரகசியம்!

சதுரகிரியில் மறைவாக இருப்பதாய் கருதப் படும் தைலக் கிணறு பற்றி ஏராளமான கதைகள் உண்டு. இவற்றில் பல கதைகளை புனைவின் உச்சமாகவே கூட முந்தைய பதிவொன்றில் இந்த தைலக் கிணறு குறித்த ஒரு கதையினை கருதலாம்

பிலாவடி கருப்பண்ண சாமி கோவிலின் பின்னால் இருப்பதாக கூறப்படும் இந்த தைலக் கிணற்றை இதுவரை யாரும் கண்டறிந்து கூறியதாக தெரியவில்லை.

 இரசவாதம் செய்வதற்கு தேவையான மூலிகை குழம்பின் மிகுதி இந்த கிணற்றுக்குள் கொட்டப் பட்டு அதற்கு காவல் தெய்வங்களை சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை சாமானியர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும் மட்டுமே சமாதானம் சொல்லப் படுகிறது. இன்றைய பதிவில் இது தொடர்பான சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

பல் வேறு சித்தர்களின் பாடல்களில் இந்த தைலக் கிணறு குறித்த தகவல்கள் காணப் பட்டாலும், போகர் அருளிய “போகர் ஜெனன சாகரம்” என்கிற நூலில் காணப்படும் தகவல் கொஞ்சம் வித்தியாசமானது. தைலக் கிணற்றின் அமைப்பு மற்றும் சூழலை விவரிக்கிறது பின்வரும் பாடல்...

"ஆமடா குகையொன்று வுள்ளேபோகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்பமீந்தார்
உயர்ந்ததொரு தயிலமெல்லா மங்கேயீந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
சென்றுபார் காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று"
"ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்க்கெல்லாம்
தெடினே னென்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து யிருக்குமிடஞ் செப்புமென்றேன்"
- போகர் -

பெரிய குகை, அதில் ஆயிரம் சித்தர்களுக்கு மேல் இருப்பார்கள். அங்கேதான் காலங்கிநாதர் தங்கி பல்வேறு கற்பங்களை சாப்பிட்டார். எனக்கும் கூட கொடுத்தார்.காலங்கிநாதர் அரிய பல தைல வகைகளை எனக்கு தந்தார். நானும் அங்கிருந்து சித்தியடைந்தேன் என்கிறார். பின்னர் கப்பல் போல இருக்கும் பெரிய பாறை இருக்கிறது. அந்த பாறையில் இருக்கும் ஒரு குழியில் இந்த அரிய தைலத்தை எல்லாம் போட்டு மூடினேன் என்கிறார்.இந்த குழிக்கு கருப்பனை காவல் வைத்திருக்கிறேன் என்கிறார். உண்மையான தேடல் உள்ளவர்கள் தெளிந்து இங்கே வந்தால் அந்த கிணற்றை காட்டச் சொல்லியே கருப்பனை காவலுக்கு வைத்தேன் என்கிறார் போகர்.

வெறுமனே கருப்பண்ண சாமி கோவிலின் பின் புறம் கிணற்றை தேடுவதை விட அந்த பகுதியில் ஆயிரம் பேர் தங்குமளவு பெரிய குகையும், அங்கேயோ அல்லது பக்கத்திலோ கப்பல் மாதிரியான பாறையும் இருக்கிறதா என தேடினால் இந்த கிணற்றை கண்டறிய வாய்ப்பு உள்ளது. இத்தனை சித்தர்கள் ஓரிடத்தில் கூடி என்ன செய்திருப்பார்கள், ஒருவேளை அந்த இடம் ஒரு ஆய்வுக் கூடமாகவோ அல்லது சித்தர்கள் தங்களின் கண்ட்றிதல்களை பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை கூடமாகவோ இருந்திருக்கலாம். போகரின் வாக்குப் படி தூய உள்ளத்துடன் கருப்பன்ண சாமியை வணங்கி இந்த தேடலை தொடர்ந்தால் தைலக் கிணற்றின் ரகசியம் தெரிய வரலாம்.

........."அரிய மூலிகைகள்"........

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்

கற்பகதரு

கற்பக விருட்சம், பஞ்சு தரு என்கிற பெயர்களால் அறியப் படும் இந்த மரமானது மகாலிங்கர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறதாம்.இந்த மரத்தில் ஐந்து கிளைகள் இருக்குமென்றும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான வெவ்வேறு வடிவத்திலான இலைகள் இருக்குமென்றும் கூறப் பட்டிருக்கிறது.இதனை வைத்தே இந்த மரத்தினை அடையாளம் காணலாம். இந்த மரத்தின் பட்டையை ஒரு பண எடையளவு ஒருவாரம் உட்கொள்ள அனைத்து நோய்களும் அகலுமாம்.மேலும் இந்த மரத்தை தட்டினால் பால் வருமெனவும்,அதனை ஒரு பண எடையளவு ஒரு மண்டலம் உட்கொள்ள காயசித்தியாகும் என குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

சஞ்சீவி மூலிகை
இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம். ஆச்சர்யம்தானே!

உரோமவேங்கை

சதுரகிரி மலையில் சங்கிலிப் பாறை
 இருக்கிறதாம்.அதற்க்கு தென் கிழக்கில் உரோமவேங்கை என்னும் விருட்சம் இருக்கிறது.இது வேங்கை மரம் போல் மிருதுவாகவும், அடித்தூர் சாம்பல் நிறத்திலும் இருக்குமாம்.அதன் விழுதானது கவரிமான் உரோமம் போல ஒருசாண் அல்லது அரைச்சாண் நீளத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். இதன் பட்டையைச் சிறிது பெயர்த்தால் இரத்தம் போல் பால் வடியுமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து சொர்ணத்திற்க்குச் சுருக்கிட பற்பமாகுமாம், அதை சாப்பிட காயத்தி கிடைக்குமாம்.
கற்றாமரை

சதுரகிரி மலையில் காலங்கி வனம் இருக்கிறது.அதன் வடக்குப் பக்கத்தில் தண்ணீர்கசிவுத் தரை இருக்கிறது. அந்தத் தரையில் கற்றாமரை என்றொரு மூலிகை இருக்கிறதாம். அந்த மூலிகையின் ஒரு இலையை கையால் தீண்டினால், அந்த இலை நான்கு இலையாக விரியுமாம். அந்த மூலிகையின் வேர் சடை போல் இருக்குமாம். இந்த வேரில் இரும்பு ஊசியைச் செருகி எடுத்தால் அது தாமிர ஊசியாக மாறி இருக்குமாம். பின்னர் அந்த தாமிர ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க வெள்ளி ஊசியாக மாறி இருக்குமாம். மீண்டும் அந்த வெள்ளி ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க அந்த ஊசியானது தங்க ஊசியாக மாறிவிடுமாம். மேலும் அந்த மூலிகையை கால்களில் மிதித்துக் கொண்டு பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் தெரியுமாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு இந்த மூலிகையை அடையாளம் கண்டு சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலத்திற்க்கு வெருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் காயசித்தி உண்டாகுமாம்.

வனபிரம்மி

முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெண்ணாவல் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து வலது பக்கத்தில் வனபிரம்மி என்னும் மூலிகை இருக்கிறது. இது கொடியாகப் படர்ந்து இருக்கும். இதன் இலை நெல்லியிலை போல தடிப்பாக இருக்குமாம். இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரைக் கொண்டு வந்து சூரணித்து முப்பது நாட்கள் புளித்த காடியில் கலக்கி உட்கொள்ள காயசித்தியாகுமாம்.

முப்பிரண்டை

மேலே சொன்ன வனபிரம்மி கொடி யிருக்கும் இடத்திற்க்கு பக்கத்தில் முப்பிரண்டை இருக்கிறதாம்.இது சாதாரன பிரண்டை போல முப்பட்டையாக இருக்குமாம்.இதைக் கொண்டுவந்து சாறு எடுத்து சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டுமாம்.உடனே அதையெடுத்து நாகத்துடன் இணைக்க நாகம் கட்டும். நாகம் சூதம் இந்த இரெண்டும் சேர்ந்த கலவையின் எடைக்கு சம எடை கெந்தி சேர்த்து இதே முலிகையின் சாறுவிட்டு அரைத்து புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை சாப்பிட்டுவர காயசித்தி கிடைக்குமாம்.

குருவரிக்கற்றாளை

சதுரகிரியின் வடபாகத்தில் குறுவரிக் கற்றாளை என்று ஒரு மூலிகை இருக்குறதாம். அது பெருவிரல் பருமன் இருக்குமாம். ஒன்றரைச் சாண் உயரம் மட்டுமே வளருமாம். குறுக்கே வரிவரியாக வரிகள் காணப்படுமாம். இதற்க்குச் சாப நிவர்த்தி செய்து வேரை எடுத்துவந்து இடித்துச் சாறேடுத்து இரும்பை மெல்லிய தகடாகத் தட்டி இந்த சாற்றில் ஊறவைத்து எடுக்க அது தாமிரமாக மாறி இருக்குமாம். அதை செந்தூரம் செய்து உண்ண காய சித்தி உண்டாகுமாம்.



சித்தர்களின் உலோகவியல் - செம்பு

செம்பொன்,செப்பு,தாமிரம் என சித்தர்களின் பாடல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் செம்பு பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். இரசவாதத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் அருளப் பட்டிருக்கிறது.

தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும்,வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார்.அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கமும்,வெள்ளியும் பய்ன்படுத்த முடியும் என்கிறார்.

போகர் தனது “போகர்7000” என்கிற நூலில் செம்பின் இரு வகைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"ஆச்சென்ற செம்புதனில் இரண்டு பேதம்
அதன் விரிவு எதெண்றாக்கால் சொல்லக் கேளு
ஓச்சென்ற நேர்பாளம் என்னும் செம்பு
உத்தமந்தான் மிகுதியுமென் றறிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் ற்றிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் றறிந்து கொள்ளே"

செம்பில் இரண்டு வகை இருப்பதாகவும்,அவற்றில் நோபாளம் என்பது உத்தம வ்கையைச் சேர்ந்தது என்றும், மிலேச்சன் என்பது மத்திம வகையை சேர்ந்தது என குறிப்பிடுகிறார். மேலும் அவற்றின் குணாதிசயங்களை பின்வருமாறு கூறுகிறார்.

"அறிந்துமேதான் உத்தமத்தின் குணத்தைக் கேளு
அழுத்தமான மழுங்கலாக பார மாகி
செறிந்துமேதான் சிவப்பாகி அடிக்க அடிக்க
தீர்க்கமாக மிருதுவாய்த்தான் காய்ச்சினாக்கால்
வெறிந்துமேதான் விகாரகுண மில்லா தானால்
மிகுதியுமே உத்தமந்தான் இந்தச் செம்பு
மறிந்துமேதான் மத்திபத்தின் குணத்தைக் கேளு
மகாவெளுப்பு கருப்போடு சிவப்பு மாமே"

உத்தம வகை செம்பானது அழுத்தமாகவும், மழுங்கலாகவும், பாரமாகவும் இருக்கும்.இவை நன்கு செறிவான சிவப்பு நிறத்தைக் கொண்டது. நன்கு அடிக்க அடிக்க மிகவும் மென்மையாகும் தன்மை கொண்டது. மேலும் இதனை உருக்கினால் விகாரமடையாது. இதுவே நேர்பாளம் என்னும் உத்தம செம்பாகும் என்கிறார் போகர். என்று அறிந்து கொள் என்கிறார்.

"சிவப்பாகி கடினமாகி உத்தமத் துக்குச்
சிதைந்து மேதான் பெரிதாகி இருப்பதாகி
சிவப்பாகி கழுவவேக ழுவவே தானும்
ஏற்றமான கருப்பதாக இருப்பதானால்
மிவப்பாகி மிலேச்சமென்ற செம்ப தாகும்
மிகுதியுமே மத்திபந்தான் இன்னங் கேளு
துவர்ப்பாகி சுரோணிதவண் ணமிக வெளுப்பு
சுத்தமான கருங் கருப்பு கனமில் லாதே"

மத்திம வகை செம்பானது வெளிர் சிவப்பு நிறமும், கருமையும் கலந்த நிறத்துடன் காணப்படும். இவை உத்தம வகை செம்பினைப் போல உறுதியாக இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் என்கிறார். மேலும் இதனை உருக்க வெளிர் நிறம் நீங்கி கருமையடையும் என்றும் கூறுகிறார். இந்த வகை செம்பானது கனமில்லாமல் இருக்கும் என்கிறார்.