youtube

25 February 2016

#சாபங்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் :

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த சாபங்களில் ஒருசிலவற்றை பார்ப்போம்

பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.

கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து இருப்பதும்,பூஜையையும் மறப்பதும் குலதெய்வ குற்றத்தை ஏற்படுத்தும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

தீப ஆரத்திஎடுப்பது எதற்காக?



நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன.

 அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.

 உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம்.

 தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம்

 என்றாலும் அது எதற்காக என்றும்,

 ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும்

 நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை.

அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று.

 அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள்.

 பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு

 இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள்.

 அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது.

 ’நான்’என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை

 அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை

நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.

அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.

 அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.

இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும்.

அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான்

இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும்.

 அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி.

நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர்

 ஞானத்தின் துணையுடன்

 இறைவனைக் காண முடியும்

என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.

திரை விலகுதல்,
தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல்

 எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல

 ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல்

 எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும்

என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.

உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.

  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

     விளக்கினின் முன்னே வேதனை மாறும்

     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள்.

 அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.


(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது,

அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும்

என்றும்

ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள்

 என்றும் திருமூலர் விளக்குகிறார்.)

கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது.

கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.

 கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது.

 இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது.

ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது

 மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய

மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான்.

 அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன.

 ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து

இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.


தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.

’இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும்.

 என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’

என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.


எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு

 இறைவனை வணங்கி

 அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல்

 மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள்.

அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை.

அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள்.

 உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!

சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.

 அதற்கான பதிலையும் பார்ப்போம்.

புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர்,

குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய்,

தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர்

 முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.

அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை.

 அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள்.

 பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

 மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் .

 எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.

 வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி

 தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம்.

 அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

பசி எடுக்காமல் இருக்க

http://chinamaruthansithar.blogspot.in/இது பற்றிய தகவலை அகஸ்தியர் அமுதகலைஞானம் 1200 ல் இது பற்றிய குறிப்பை சொல்லிருக்கிறார் அந்தபாடல்: தானென்ற நாயுருவி வித்து தன்னை தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா பானென்ற பசும்பாலில் கரைத்துக்கொண்டு பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு தேனென்றே தியானித்துக கொண்டாயாகில் செவ்வியாய் வயிறுபசி எடுப்பதில்லை நானென்று எத்தனைநாள் இருந்தாலுந்தான் நளினமுடன் பசியாது மைந்தா பாரே. இந்த பாடலின் பொருள்: நாயுருவி செடியின் விதை எடுத்து முலைப்பாலிட்டு அரைத்து பசும்பாலில் கரைத்து எட்டி விதையை அரைத்து உண்ண பசி எடுக்காது மீண்டும் பசிக்க வேண்டுமானால் மஞ்சள் இஞ்சி திண்ண வேண்டும். இதை போன்று பல சாதனைகளை நம் தமிழ் சித்தர்கள் இந்த உலகுக்கு தந்திருக்கின்றனர் நாம்தாம் பகுத்தறிவு நாத்திகம் என்று பேசி முட்டாளாக இருக்கிறோம் .நிறைய தமிழ் பகுத்தறிவாளிகள் ஆதியில் இருந்தே தமிழனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பரப்பிவிட்டு கொண்டிருக்கின்றனர் உங்களுக்கு பதில் ஒன்றுதான் ஆன்மிகமும் அறிவியலும் தமிழனின் இரு கண்கள் ஆன்மீகம் இல்லாத தமிழன் அவன் வெறும் பிணத்துக்கு ஒப்பானவன்.

செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும்

தேரையரின் "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல் இது. புகழான கொக்கு மந்தாரைப் பூச்சாற்றால் நாட்டடா செம்புவிராக னெடையும் பத்து நலமாக ஏழுவிசைக் காய்ச்சித் தோய்த்து ஆட்டடா குகைக்குள்ளே வைத்துருகும் போதிலே அப்பனே கழஞ்சியெடைச் செந்தூரம் போடு தேட்டடா வுருகுவெள்ளி கண்விட் டாடும் தெளிவாக செய்திடில் ஐந்ததுவாகும் மாத்தே. - தேரையர். ஒரு விராகன் எடை அளவு செம்பினை எடுத்து அதனை கொக்கு மந்தாரைப் பூச்சாற்றில் நன்கு தோய்த்து எடுத்து உருக்கிக் கொள்ள கூறுகிறார். அதே செம்பினை மீண்டும் மீண்டும் ஏழுதடவை கொக்கு மந்தாரை பூச்சாற்றில் தோய்த்து எடுத்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி மீண்டும் மீண்டும் உருக்கி எடுத்த செம்பினை குகையில் வைத்து மீண்டும் உருக்க வேண்டுமாம். அப்படி குகையில் வைத்து உருக்கும் போது முன்னர் செய்து வைத்துள்ள துருசு செந்தூரத்தில் ஒரு கழஞ்சி எடை எடுத்து செம்புடன் சேர்த்து உருக்க வேண்டுமாம். அவ்வாறு சேர்த்து உருகும் போது வெள்ளி கண்விட்டாடுமாம் அப்போது அதை இறக்கிவிட கூடாது என்றும் அந்த நேரதில் மிகக் கவனத்துடன் உருக்கி எடுத்தால் செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும் என்கிறார்.

மிருக வசியம்

இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர். மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல் “போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா தப்பாமா லாதித்த வாரந்தன்னில் வண்மையுடன் ஓம்சடா சடாவென்று ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது. நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு “நரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டி” என வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர்.

24 February 2016

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி

“மந்திரமாவது நீறு’
வானவர் அணிவது நீறு’

என்று திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமையாகக் கூறியுள்ளனர்.

ஆன்மிக ஈடுபாடுள்ளவர்கள் திருநீறு அணிந்துகொள்கின் றனர். இது சைவர் களின் சின்னம் என்று கோவில்களில் பிரசாதமாகத் தருகிறார்கள். இதுபோன்று இறைவழிபாடு சம்பந்தப்பட்ட செயல்களில் திருநீறு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த திருநீறு சமயச் சின்னம் மட்டும்தானா? உடலில் திருநீறு பூசிக்கொள்வதால் நன்மையுண்டா? நாம் பூசிக்கொள்வது உண்மையான திருநீறுதானா? என ஏராளமான கேள்விகள் உண்டு. திருநீறு பற்றி சித்தர்கள் கூறியுள்ள சில உண்மைகளை சுருக்கமாக அறிவோம்.

திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப் பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டது திருநீறு. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறைதிருநீற்றுப் பச்சிலைகள். (இதனை சில இடங்களில் மக்கள் திணுத்திப் பச்சை இலை என்றும் கூறுவர்), வில்வப்பழ ஓடுகள், பசுமாட்டுச் சாணம்.

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.

நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும். நமது நெற்றியில் இந்த சாம்பலை முதலில் பூசியவுடன், வெண்மையான சாம்பல் தலையிலுள்ள நீரை உறிஞ்சி கறுப்பாக மாறும். பின் அதைத் துடைத்துவிட்டு மறுபடியும் பூசிக்கொண்டால் வெண்மை நிறமாகவே இருக்கும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள். பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.

மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப்பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை “புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்’, “மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு’ என்று குரு அகத்தியர் கூறுகிறார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்திவந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“விந்துநிலை யறிந்து விந்தை கண்டால்
விதமான நாதமது குருவாய்போகும்
அந்தமுள்ள நாதமது குருவாயானால்
ஆதி அந்த மானகுரு நீயே யாவாய்’

என்ற குரு அகத்தியர் வாக்கினை ஏற்று, சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த உண்மைகளைக் கடைப்
பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வை நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள முடியும்!

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

குபேர வாசலைத் திறக்கும் குபேர இரகசியங்கள்

குபேர வாசலைத் திறக்கும் குபேர இரகசியங்கள்

குபேர வாசலைத் திறக்கும் குபேர இரகசியங்கள்

*வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில்

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில்  இராமநாதபுரத்தில்

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.

இடதுபுறம் உள்ள கோபுரமh. மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.

காஞ்சி மகாப்பெரியவருக்கு காபி குடிப்பது என்பது அறவே பிடிக்காது

காஞ்சி மகாப்பெரியவருக்கு காபி குடிப்பது என்பது அறவே பிடிக்காது. தன்னை வணங்க வரும் பக்தர்களுக்கும் இதை அறிவுரையாகச் சொல்வார். ஒருமுறை சென்னையில் இருந்து ஒரு தம்பதி காஞ்சிபுரம் வந்து பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தனர். தங்கள் முறை வந்ததும் பெரியவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். அப்போது பெரியவர் அந்தப்பெண்ணிடம், "உன் ஆத்துக்காரர் நிறைய காபி குடிப்பாரோ?'' என்று கேட்டார்.
அந்தப் பெண்ணும், "ஆமாம் பெரியவா! காலையில் ஆபீசுக்கு கிளம்பும் முன் மூணு முறையும், போய் வந்த பிறகு மூணு முறையும் குடிப்பார். ஆபீசில் வைத்து எத்தனை தடவை குடிக்கிறாரோ... தெரியாது...'' என்றார்.
பெரியவர் அந்த நபரிடம், "இனிமேல் காபி குடிக்காதே. வேண்டுமானால் மோர் நிறைய குடி...'' என்றார்.
ஊருக்கு சென்ற பிறகு இரண்டு நாள் மட்டும் பெரியவர் சொன்னபடி அவர் நடந்து கொண்டார். மூன்றாம் நாளிலிருந்து மனைவியிடம் காபி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். கணவர் வற்புறுத்தும் போது, அந்த அம்மையாரால் என்ன செய்ய முடியும்? அவரும் காபி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த நபர் பெரியவரின் படத்தின் முன் சூடாக காபியை வைத்து, "பெரியவா! என்னை மன்னிச்சிடுங்கோ! என்னால் காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை,'' என்று சொல்லி வணங்கி விட்டு குடித்து விடுவார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்தது.
பின், அவர்கள் மீண்டும் ஒருமுறை காஞ்சிபுரம் வந்து பெரியவரைத் தரிசித்தார்கள். பெரியவர் அவரிடம், நீ சுடச்சுட எனக்கு தினமும் காபி கொடுத்து நாக்கு வெந்து விட்டது. இனிமேலாச்சும் எனக்கு காபி கொடுக்காதே,'' என்றார். அந்த நபருக்கு தூக்கி வாரி போட்டு விட்டது.
நம் வீட்டில் பெரியவர் படத்தின் முன் வைத்த காபியை நைவேத்யம் போல் ஏற்று பெரியவர் பருகியிருக்கிறாரே! அப்படியானால், அது சாதாரண படமில்லையே! உயிரோட்டமுள்ளதாக இருந்திருக்கிறதே! தவறு செய்து விட்டேனே! மேலும், வீட்டில் நடந்த சம்பவம் இவருக்கு எப்படி தெரிந்தது. ஒரு மகாஞானியின் அறிவுரையைக் கேட்காமல் அவரையும் சிரமப்படுத்தி விட்டோமே!'' என்று வருந்தினர்.
கண்களில் நீர் வழிய பெரியவரின் பாதத்தில் விழுந்து, "பெரியவா! இந்த ஜென்மத்தில் இனிமேல் காபியை தொடவே மாட்டேன்,"" எனக்கூறி மன்னிப்பு கோரினார்.
பெரியவரும், "திருந்தினால் சரி...'' என்று சொல்லி பிரசாதம் தந்தார்.
முக்காலமும் அறிந்த அந்த ஞானியின் திருவடி பணிவோம்.

ஒரு மன்னன் தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான்

ஒரு மன்னன் தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என்று ஏழு தடவை சொல்லுவான். அரண்மனைக்கு கிளம்பும் முன் கேசவா, கேசவா என்பான். சாப்பிடும் முன் "கோவிந்தா' என்பான். தூங்கச்செல்லும் முன் "மாதவா' என்பான். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் பதினாறு திருநாமங்களையும் ஏழு தடவை சொல்வது அவனது வழக்கம்.
என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும், முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும்
அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்குரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான்.
மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக
கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.
"கிருஷ்ணா... கிருஷ்ணா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள்,'' என புலம்பிக் கொண்டிருந்தான்.
ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.
அவரிடம், ""சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே,''
என அழுதான்.
முனிவர் அவனைத் தேற்றி, ""மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?'' என்றார்.
"ஆமாம் சுவாமி! இப்போதும் கூட தினமும் என் நாட்டு சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன்,'' என்றான்.
"இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும்,'' என்றார்.
"ஏன் இப்படி சொல்கிறீர்கள் சுவாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே!'' என்று கேட்டான் மன்னன்.
"மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்,'' என்றார் முனிவர்.
அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.
சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.
"இதென்ன ஆச்சரியம்,'' என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார்.
"சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே,'' என்றான் மன்னன்.
"மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, "அச்சுதா... அச்சுதா' என கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச்சொல்லி அன்னம் இடுகின்றனர். "அச்சுதன்' என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து,'' என்றார்.
ஆனால், மன்னன் மறுத்து விட்டான்.
"என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து
விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்,'' என சொல்லிவிட்டான் மன்னன்.
அவனது மனஉறுதி கண்ட கிருஷ்ணர், அவனுக்கு காட்சியளித்து சுகமடையச் செய்தார்.
பார்த்தீர்களா! கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்பதை! இனி உங்கள் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழையுங்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள

23 February 2016

ஆன்மீக த்தில் சிறிது நாட்டம்

ஆன்மீக த்தில் சிறிது நாட்டம்உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.

சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.

புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.

இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.

புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை?

சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”

“தேவர் குறளும் திருநான் மறை முடிபும்

மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்”

திருக்குறள் நான்கு வேதங்கள் /தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.

ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்?

நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?! புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர். ஒரு புருவம் அதன் மத்தி என்று ஒன்றும் இல்லை, அதன் கீழ் இருப்பது கண்.

இப்படி சிந்திக்க வேண்டும். யூகிக்க வேண்டும். புருவ மத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணை பற்றி தானே சொல்லியிருப்பர்.

நாம் சிந்தித்ததை சித்தர்கள், ஞானிகள் பாடல்கள் கொண்டு பார்போம். எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசயாகவும் கூறிபிட்டுள்ளனர். அதில் சிலவற்றை இதில் பார்போம். இதை விட அதிக விளக்கம் வேண்டின் எங்கள் குருநாதர் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

“புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி” . – சித்தர் காகபுசந்தர்.

புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி. அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும். அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

கண் நிறைந்த ஜோதியட புருவமத்தி

அலையாதே புருவமத்தி துலையென்றெண்ணி

அப்பனே மூக்கு நுனி அந்தமாச்சே அகத்தியர்

கண்ணில் நிறைந்த ஜோதியே (அ ) ஒளியே புருவமத்தி என்று தெளிவாக அகத்தியர் பெருமான் நமக்கு உரைக்கிறார்.

வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.

“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். “நடுக்கண் தான் புருவபூட்டு” இதற்கு விளக்கமும் வேண்டுமோ.

மேலும் வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”

தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:

இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:

“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை “

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி. அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

“நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்”

“நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன். நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.

மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.

“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”

கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “கடவுளின் ஒளியை தியானிப்போமாக என்பதே.” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும்.

இப்படி அனைவரும் கூறுவது ஒன்று தான்.

கண் ஒளியை பற்ற உங்களுள் கடந்து செல்ல குருவிடம் உபதேசம் தீட்சை பெறுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக

22 February 2016

வாழ்வில் வெற்றிபெற ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்

நம்முடைய வாழ்வில் சிறப்பான செயலுக்காக கிடைத்த பரிசாக செய்யபடுவது தான் இந்த ஹோமம்.இது நேர்மறை சக்தி கொண்டதாக கருதப்படுகிறது.இந்த பூஜையின் அதிர்வுகள் எந்த வடிவத்தில் இருக்குமென்றால் எதிரிக்கு விபத்து,கண் வார்படம் இந்த மாதிரியான செயல்கள் நடைபெறும்.நீங்கள் தேவியை வழிபடும் போது தேவி என்றைக்கும் நேர்மறை தன்மை மற்றும் சுபீட்ஷத்தையும் கொண்டு நீங்கள் தேவியை வழிபட வேண்டும்.

ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்

"ஒம் க்ரிம் க்ஷம் பாக்ஷா ஜிவாலா ஜிஹேவ் ப்ரட்யான்கிரே க்ஷம் க்ரிம்ஷம் பட்ஒம் க்ரிம் தும் ஸ்வுதிட்ஷா புருஷி கிம் ஸ்வாபிஷி பாயாம் மேயாசமுபதிட்தம் யாதி சாக்கியம் அஸ்கயம் வா தான் மேயாசம்யா ஸ்வாகா தூம் க்ரிம் ஒம்"

ப்ரத்யங்கிரா தேவியை வழிபடும் போது எதிர்மறையான செயல்கள் அனைத்து நீங்கி விடும்.உங்கள் வாழ்க்கையில் வந்த துரதிஷ்டங்களும்  நீங்கி விடும்.அப்போது பேய் குணங்களை கொண்ட ஹிரண்யகசிபுவை நரசிம்மன் கொன்று விடுவார்.அவரை சமாதான படுத்த சிவபெருமான் தனது 3வது கண்ணை திறந்தார் என நம்பபடுகிறது.அந்த நேரத்தில் எதிரிகளின் தவிப்பும் கண்,உடல்,வியாதிகள் அனைத்து சாபங்களுக்கும் விமோர்சனம் கிடைத்தது.இந்த வாழ்நாளில் தங்களுடைய தவிப்புகள் அனைத்தும் முந்தைய ஜென்மத்தின் கர்ம விளைவுகளாக கருதப்படுகிறது.தேவியின் ஆசிர்வாதத்தின் மூலம் எதிர்மறைகள் மறைந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறார்.
இப்போது நீங்கள் எப்படி அவர்களை தெய்வீகமாக அனுகமுடியும்?

ப்ரத்யங்கிரா தேவி அனைத்து சக்திகளையும் இழந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டி மோசமான செயல்கள் அனைத்தும் துடைத்தெறிய படுகிறது.பின்பு  அவர்கள் உங்களுக்கு சந்தோஷமான வாழ்வை அருள்வார்

ஜோதிடமுறைப்படி ப்ரத்யங்கிரா தேவி அருள்  எப்படி தெரியும்
  ப்ரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் ஏற்படுத்தி வழிபடுவதன் மூலம் எதிர்மறையான ஆற்றல் அனைத்தும் அழிக்கப்படும்.
நீங்கள் எப்படி எதிர்மறை சக்தி இருப்பதை உணர்வீர்கள்.
நீங்கள் செய்யும் வேலையில் கவலையாக இருந்தால் எதிர்மறையான சக்திகள் வெற்றி வருவதையும் அழித்து விடும்.