youtube

3 October 2016

சித்தர்களின் உலோகவியல் - செம்பு

செம்பொன்,செப்பு,தாமிரம் என சித்தர்களின் பாடல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் செம்பு பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். இரசவாதத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் அருளப் பட்டிருக்கிறது.

தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும்,வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார்.அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கமும்,வெள்ளியும் பய்ன்படுத்த முடியும் என்கிறார்.

போகர் தனது “போகர்7000” என்கிற நூலில் செம்பின் இரு வகைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"ஆச்சென்ற செம்புதனில் இரண்டு பேதம்
அதன் விரிவு எதெண்றாக்கால் சொல்லக் கேளு
ஓச்சென்ற நேர்பாளம் என்னும் செம்பு
உத்தமந்தான் மிகுதியுமென் றறிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் ற்றிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் றறிந்து கொள்ளே"

செம்பில் இரண்டு வகை இருப்பதாகவும்,அவற்றில் நோபாளம் என்பது உத்தம வ்கையைச் சேர்ந்தது என்றும், மிலேச்சன் என்பது மத்திம வகையை சேர்ந்தது என குறிப்பிடுகிறார். மேலும் அவற்றின் குணாதிசயங்களை பின்வருமாறு கூறுகிறார்.

"அறிந்துமேதான் உத்தமத்தின் குணத்தைக் கேளு
அழுத்தமான மழுங்கலாக பார மாகி
செறிந்துமேதான் சிவப்பாகி அடிக்க அடிக்க
தீர்க்கமாக மிருதுவாய்த்தான் காய்ச்சினாக்கால்
வெறிந்துமேதான் விகாரகுண மில்லா தானால்
மிகுதியுமே உத்தமந்தான் இந்தச் செம்பு
மறிந்துமேதான் மத்திபத்தின் குணத்தைக் கேளு
மகாவெளுப்பு கருப்போடு சிவப்பு மாமே"

உத்தம வகை செம்பானது அழுத்தமாகவும், மழுங்கலாகவும், பாரமாகவும் இருக்கும்.இவை நன்கு செறிவான சிவப்பு நிறத்தைக் கொண்டது. நன்கு அடிக்க அடிக்க மிகவும் மென்மையாகும் தன்மை கொண்டது. மேலும் இதனை உருக்கினால் விகாரமடையாது. இதுவே நேர்பாளம் என்னும் உத்தம செம்பாகும் என்கிறார் போகர். என்று அறிந்து கொள் என்கிறார்.

"சிவப்பாகி கடினமாகி உத்தமத் துக்குச்
சிதைந்து மேதான் பெரிதாகி இருப்பதாகி
சிவப்பாகி கழுவவேக ழுவவே தானும்
ஏற்றமான கருப்பதாக இருப்பதானால்
மிவப்பாகி மிலேச்சமென்ற செம்ப தாகும்
மிகுதியுமே மத்திபந்தான் இன்னங் கேளு
துவர்ப்பாகி சுரோணிதவண் ணமிக வெளுப்பு
சுத்தமான கருங் கருப்பு கனமில் லாதே"

மத்திம வகை செம்பானது வெளிர் சிவப்பு நிறமும், கருமையும் கலந்த நிறத்துடன் காணப்படும். இவை உத்தம வகை செம்பினைப் போல உறுதியாக இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் என்கிறார். மேலும் இதனை உருக்க வெளிர் நிறம் நீங்கி கருமையடையும் என்றும் கூறுகிறார். இந்த வகை செம்பானது கனமில்லாமல் இருக்கும் என்கிறார்.

No comments: