youtube

3 November 2016

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க
காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...

மாந்திரிகம் என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

                                                                                        - கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.



இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேஎன்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments: