youtube

6 November 2016

தேரையர் சித்தர்

தேரையர் சித்தர்
============

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் அவ்வையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். அவ்வையுடன் வந்த சிறுவனை கண்டு அவனைப் பற்றி விசாரித்தார் அகத்தியர். அதற்கு அவ்வையார் இவன் பாவம் ஊமை பிள்ளை, உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார்.

உடனே சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீட னாக ஏற்றுக் கொண்டார். பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன் ஆனால் கூன் முதுகு உடையவர் இதை ஜாடைமாடையாக மக்கள் விமர்சிப்பதைத் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது கூனை சரி செய்து விடுவதாக கூறினார்.

சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார். சீடன் மூலிகைகளை கொண்டு வந்தவுடன் அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே அகத்தியர் ஊமை சீடனை ``அடுப்பைப் பார்த்துக்கொள்'' என்று ஜாடை காட்டிவிட்டு சென்றார்.

மூலிகை சாறு நன்றாக கொதித்துக்கொண்டிருந்தது சீடன் மிகவும் கவனமாக இருந்தார். கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல்கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்தது. இது கண்ட சீடன் இராம தேவன் மூலிகை சாறு பதமாகி விட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

குறிப்பறிந்து செயல்பட்ட ராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது. காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்க முடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தலைவலியை குணப்படுத்துமாறு கதறினான்.

அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். அவருக்கு தலைவலியின் காரணம் புரிந்து விட்டது. சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்குபகுதியில் தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. இதை கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார்.

குருநாதரின் திகைப்பை கண்ட ராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வந்து தேரையின் கண்களில் படு மாறு காண்பித்தான். தேரை ணீரை பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தில் குதித்தது. உடனே அகத்தியர் சந்தாகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மூடினார்.

சீடரை கட்டித்தழுவி பாராட்டினார். ராமதேவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார். அவனுடைய ஊமை தன்மையை போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அகத்தியரின் சீடனாகி தொல்காப் பியம் என்ற இலக்கண நூலை இயற்றி தொல் காப்பியர் என்ற பெயரும் பெற்றார்.

பிறகு தேரையர் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காடுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்த சித்தர்களின் நோய்களைப் போக்கினார். ஒரு சமயம் அகத்தியருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்ட போது அவரது கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார்.

பார்வை தெளிவடைந்த அகத்தியர் சடைமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களின் விழுந்து வணங்கினார். ஒருநாள் அகத்தியர், தேரையரை அழைத்து தேரையா எனக்கு கண்வெடித்தான் மூலிகை வேண்டும் என்றார்.

கண் வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் போய்விடும் யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குச் சென்றார். கண் வெடிச்சான் மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அங்கேயே உட்கார்ந்து கண்களை மூடி தேவியைத் தியானம் செய்தார். கவலைப்படாதே தேரையா!

மூலிகையை நானே தருகிறேன் என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண் வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு மூலிகையை அகத்தியரிடம் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய் நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது என்றார். குருவின் கட்டளைப்படி தேரையர் குலைபாடம் என்ற நூலை இயற்றினார்.

நெடுங்காலம் மருத்துவம் சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாளநாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். தேரையரை வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு முக அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும். மூலமந்திரமாக ``ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!! என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்:- மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவை. தேரையரை தினமும் வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் சூரிய கிரஹத்தால் ஏற்படும் தோஷம் விலகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குணமாகும். பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை தீரும். தீராத தலைவலி, இடுப்பு வலி நீங்க நலம் உண்டாகும்.

உடலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) நோய் சரியாகும். வீண்பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும். வாக்பலிதமும் ராசியோகமும் உண்டாகும். எந்த பிரச்சினையானாலும் சரி முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். இவரை பூஜிக்க ஞாயிற்றுக்கிழமை சிறந்தது.

வாழ்கவளமுடன்

No comments: