youtube

9 November 2012

ஆடி மாதம் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். அதில் ஒன்றுதான் நாக சதுர்த்தி விரதம்.. அதாவது கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தியையும், ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.

நம் இந்து சமயத்தில் மலைகளையும், மரங்களையும், பூமியையும், விலங்குகளையும் கடவுளாகக் கொண்டாடுகிறோம். பயம் தரும் பாம்பையும் நாம் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். அப்படி பாம்பை பூஜை செய்யும் தினம்தான் நாகசதுர்த்தியும் நாகபஞ்சமியும் ஆகும்.

இந்த நாக சதுர்த்திக்கு செவி வழிச்
செய்தி ஒன்று இருக்கிறது.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் வயலில் வேலை செய்யும் விவசாயிகள். ஒருநாள் பாம்பு கடித்து அவர்கள் உழவு செய்யும் சமயம் இறந்து விட்டார்கள். அந்தப் பெண் துக்கப்பட்டாள். இறந்து போன தன் அண்ணன்களை உயிர்ப்பிக்க நாகராஜாவானி ஆதிசேடனை பூஜை செய்தாள். அண்ணன்மார்கள் பிழைத்து எழுந்தார்கள்.

இதிலிருந்து கொண்டாடப்படுவது தான் நாகசதுர்த்தி_நாக பஞ்சமி விரதங்கள். சகோதரர்கள் நல்வாழ்விற்காக சகோதரிகள் கொண்டாடுகின்ற விரதம் இது.

இந்த விரதத்தைப் பற்றி புராணத்தில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது என்று
பார்க்கலாம்.

சுனந்து முனிவர் சதானிக மன்னரிடம் பஞ்சமி விரத உபவாசம் பற்றிக் கூறுகிறார்.

இந்தப் பஞ்சமி விரதம் நாகங்களுக்கு மிகவும் இஷ்டமான விரதம். என்ன கேட்டாலும் கொடுக்கக் கூடிய விரதம். இந்த விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர் கூட குழந்தை பெறும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அதிலும் நல்ல குழந்தைகளைப் பெறும் பாக்கியமும் கிடைக்கும். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த விரத மகிமையில் நம் முன்னோர்களின் வரலாறும் பிணைந்திருக்கிறது.

இந்த நாக பஞ்சமி விரதம் நாகலோகத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாகங்கள் வசிக்கும் புற்றுக்களுக்கு பூஜை செய்பவர்களுக்கும், பிரதிஷ்டை செய்த நாக சிலைகளுக்கு ஸ்நானம், பானம், அபிஷேகம், நைவேத்யம் செய்கிறவர்களுக்கும் அவர்களின் குலத்தையே நாக தேவதைகள் காப்பாற்றுகின்றன.

வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், திருதிராஷ்ட்ரன், கார்க்கோடகன், அனந்தன், தனஞ்சயன் போன்ற பெரிய நாகங்கள். நம்மைக் காக்கின்றன. செல்வங்களை வாரி வழங்குகின்றன.

ஒரு சமயம் தாயின் சாபத்தால் நாக லோகத்தில் ஜலவறட்சி ஏற்பட்டது. அதனால் நாகங்கள் தாகத்தால் தவித்தன. அதனால் தான்-நாகர்களுக்கு ஸ்நானம் செய்வித்து பசும் பால் ஊற்றினால் சர்ப்பங்களுக்கு தாக வறட்சி தீர்ந்து மனமும் குளிர்கிறது என்று அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அத்துடன் சர்ப்பதோஷம், பாம்பு பயம் எல்லாம் நிவர்த்தியாகிறது.

மன்னர் சதானிகர் குறுக்கிட்டுக் கேட்டார். ``மகரிஷியே, தாய் சாபமிடும் அளவுக்கு என்ன நேர்ந்தது?''

மகரிஷி சொல்லலானார்.

தக்ஷப் பிரஜாபதிக்குப் பல பெண்கள். அவர்களில் விந்தை, கர்த்ரு என்ற இரண்டு பெண்கள் காஸ்யப முனிவரை மணந்தார்கள். அவரைத் திருமணம் செய்து கொண்ட திதி, அதிதி போன்ற சகோதரிகள் எல்லோருக்கும் குழந்தைகள் பிறந்திருந்தன. தங்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்று ஏங்கினர்.

இறைவன்அருளால் விந்தைக்கு அருணன், கருடன் என்ற இருவரும் பிறந்தார்கள். கர்த்ருவுக்கு ஆதிசேடன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன் போன்ற ஆயிரம் நாகங்கள் பிறந்தன. ஆனால் சுபாவத்தில் கர்த்ரு கெட்ட எண்ணம் கொண்டவள். விந்தை சுபாவத்தில் மிகமிக நல்லவள்.

ஒருநாள் கர்த்ருவும்,விந்தையும் நந்தவனத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானத்தில் தேவேந்திரனின் உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை சென்று கொண்டிருந்தது. அமுதம் பெறப் பாற்கடலைக் கடைந்த பொழுது சந்திரன், ஐராவதம், லக்ஷ்மி தேவி, பாரிஜாத மலர், தன்வந்தரி பகவான் என்று வெளி வந்த பொழுது இக்குதிரையும் வெளியே வந்தது.

``கர்த்ரு, மேலே போகும் குதிரையைப் பார்த்தாயா! பாற்கடலில் தோன்றியதால் தானே என்னவோ முழு வெண்மையாக இருக்கிறது'' என்றாள்.

விந்தை கூறியதை கர்த்ரு ஏற்கத் தயாராக இல்லை. மறுத்தாள்.

``ரொம்ப அழகுதான் நீ பார்த்த லட்சணம். அதன் வாலில் கருப்பு இருக்கிறதே. நீ அதைச் சரியாகப் பார்க்கவில்லை. உனக்கு கண் சரியாகத்தெரியவில்லை என்று தெரிகிறது'' என்று கர்த்ரு மறுத்துக் கூறினாள்.

சற்று நேரம் விந்தையும், கர்த்ருவும் தாங்கள் சொன்னதே சரியென்று வாதிட்டனர். கடைசியில் கத்ரு பந்தயம் கட்டினாள்.

``இதோ பார் விந்தை, நாளை இதே வழியாக இந்த உச்சைஸ்ரவஸ் போகும் பொழுது பார். அந்தக் குதிரை முழுதும் வெளுப்பாக இருந்தால் நான் உனக்கு அடிமையாக இருப்பேன். அதே சமயம் வாலில் கருப்பு இருந்தால் நீ எனக்கு அடிமையாக வேண்டும். சம்மதமா விருதை'' என்று கத்ரு கேட்டாள்.

விந்தையும் ``சம்மதம்'' என்றாள்.

விந்தையிடம் தான் தோற்கக் கூடாது என்று எண்ணிய கத்ரு சதி திட்டத்தைத் தீட்டினாள். தன் புதல்வர்கள் நாகர்களை அழைத்தாள். தன் சதித் திட்டத்தைக் கூறினாள்.

``என்னருமைப் புதல்வர்களே நீங்கள் உங்கள் தாயாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் அல்லவா!''

``என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தாயே''

``குழந்தைகளே, உங்களில் ஒருவன் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ள வேண்டும். நாங்கள் பார்க்கும் பொழுது வால் கருப்பாகத் தெரியும். நான் விந்தையிடம் கூறியது சரியாகி விடும். பிறகென்ன? விந்தை எனக்கு அடிமையாகி விடுவான்.''

இதைக் கேட்ட புதல்வர்கள் துடித்துப் போய் விட்டார்கள். ``தாயே, தாங்கள் கூறிய அசாத்தியமான காரியத்தை நாங்கள் செய்ய முடியாது'' என்று மறுத்துக் கூறினார்கள்.

கர்த்ரு அதீத கோபம் அடைந்தாள். தன் அருமைப் புதல்வர்கள் என்றும் பாராமல் சாபமிட்டாள்.

``நீங்கள் என் பிள்ளைகளே இல்லை. அதனால் பாண்டவ வம்சத்தில் பிறக்கப் போகும் ஜெனமே ஜெய மகாராஜா சர்ப்ப யாகம் செய்யும் பொழுது நீங்கள் எல்லோரும் அதில் பலியாகக் கடவது'' என்றாள்.

நாக கணங்கள் நடுங்கினார்கள். பாற்கடலைக் கடையும் பொழுது வாசுகி உதவியதால் வாசுகியை அழைத்துக் கொண்டு பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

``கவலைப்பட வேண்டாம். ஒரு யோசனை சொல்லுகிறேன். உங்கள் இனத்தைப் படைத்தவன் நானே. யாயவர் வம்சத்தில் ஜரத்காரு என்ற தபஸ்வி தோன்றுவார். அவருக்கு உங்கள் சகோதரியை மணம் செய்து கொடுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் `ஆஸ்திகர் என்ற புதல்வன் ஜெனமேஜெயன் செய்யும் சர்ப்ப யாகத்தைத் தடுப்பான்.''

இதைக் கேட்ட நாகர்கள் நிம்மதியாக நாகலோகம் திரும்பினார்கள்.

பிரம்மா கூறியபடியே நடந்தது. ஆஸ்தீக முனிவர் நாகங்களை இந்த வேள்வித் தீயிலிருந்து காப்பாற்றியது இந்தப் பஞ்சமி திதியன்றுதான். அதனால்தான் நாகங்களுக்குப் பஞ்சமி திதி உகந்த நாள்.

சர்ப்ப தோஷம் இருப்பதினாலேயே ஒரு மனிதன் சர்ப்பத்தால் அடிபடுகிறான். இந்தப் பஞ்சமி திதிபூஜையை 12 மாதம் செய்து அதன் பின் சதுர்த்தியன்று ஒருவேளை சாப்பிட்டுப் பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும். நாகங்களை தங்கத்தினாலோ, மரத்தினாலோ, மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அர்ச்சித்து தூப தீப, நைவேத்தியங்கள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஐந்து பிராமணர்களுக்கு போஜனம் செய்ய வேண்டும். 12 நாகங்களுக்கும் 12 மாதங்கள் பூஜை செய்ய வேண்டும்.

இம்மாதிரி ஒரு வருஷம் வரையில் பூஜை செய்து விரத பாரணை செய்ய வேண்டும். முடிந்தால் பிராமணர்களுக்குத் தங்கத்தால் ஆன நாகர்களைத் தானம் செய்யவும். ஜனமே ஜெயன் மன்னனும்அவருடைய பிதா பரிக்ஷித்தும் இந்த விரதத்தைச் செய்தார்கள். ஏராளமான தங்க நாகர்களை தானம் செய்தார்கள்.இதனால் இவர்களுடைய பித்ருக் கடன்கள் நிவர்த்தியாயிற்று. இந்த நாக பஞ்சமி விரதத்தை நியமத்துடன் செய்து, நாக பஞ்சமி கதையைக் கேட்கிறார்களோ அவர்கள் சர்ப்ப தோஷங்களிலிருந்து விடுபடுகிறார்கள். குலம் விருத்தி அடையும்.''

அதன் பின்பு சுனந்தர் மன்னர் சதானந்த மன்னருக்கு நாகங்களின் வர்ணங்கள், ஜாதிகள், விஷ வகைகள் எல்லாவற்றையும் விவரித்தார்.

நாக பிரதிஷ்டை எப்படிச் செய்வது?

ஒரு கருங்கல்லில் ஒரு படம் பாம்பு முகம், அல்லது இருபடம் உள்ளனவாக பாம்புகள் வரைந்து அச்சிலையை ஜலவாசஞ் செய்து - அன்றிரவு தம்பதிகள் உபவாசம் இருந்து மறுநாள் நாகசிலைக்கு பூஜை முதலியன செய்து அரச மரத்தடியில் பிரதிஷ்டை பண்ண வேண்டும்.பிராமண போஜனமும், பக்தர்கள் போஜனமும் செய்ய வேண்டும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். சுமங்கலிகள் செய்ய வேண்டிய பூஜை இது. சர்வ மங்களம் உண்டாகட்டும்.

No comments: