youtube

10 November 2012

தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும்.

தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

திருமகளாம் மகாலட்சுமிக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என்று தென்னகத்தின் ஆன்மிகவாதிகளிடம் கூறினால் வியப்படைவார்கள். ஆனால் வடக்கே வாழ்பவர்கள் அலைமகளுக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என உறுதிபட நினைக்கின்றனர்.

இந்துமதக் கடவுளரில் வாகனம் இல்லாத தெய்வம் இல்லை. சரஸ்வதி- பிரம்மாவின் வாகனமாக அன்னப் பறவையும்; பார்வதி- பரமேஸ்வரனின் வாகனமாக ரிஷபமும் உள்ளதைப் போன்று, லட்சுமி- மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடன் உள்ளது. ஆனால் லட்சுமியின் பிரத்யேக வாகனம் ஆந்தை என்று பாரதத்தின் வடக்குப் பகுதிவாழ் மக்கள் நம்புகின்றனர். அவர் களுக்கு ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக அவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.

தீபாவளி தினம் என்றில்லை; சாதாரண நாட் களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப் படுவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம். பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று வட மாநிலங்களில் சொல்கின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்...

ஒருமுறை: மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.

இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். வெகு சீக்கிரத்தில் ஒரு நற்செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று முறை: குருவின் எண். வீட்டில் எவருக்காவது விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் ஒருவரின் வருகைக்கு வாய்ப்பு உண்டு.

நான்கு முறை: ராகுவுக்கு சாந்தி செய்வார்கள்.

ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம். அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.

ஆறு முறை: சுக்கிரனின் எண். குடும்பத்துக்கு உறவினர் அல்லது உறவு இல்லாத- வேண்டிய அல்லது வேண்டாத நபர் திடீர் விருந்தாளியாக வருவார்.

ஏழு முறை: கேதுவுக்கு சாந்தி செய்வார்கள்.

எட்டு முறை: இதற்கும் உடனடியாக மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.

ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத் தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். விரைவில் சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்தி கள் வரும்.

ஆந்தை ஒரு நிஸிசர- அதாவது இரவில் அலைந்து திரிந்து இரை தேடும் பறவை. பகலில் அதற்குக் கண் தெரியாது. கூட்டுக்குள் உறங்கி ஓய்வெடுக்கும்.

பறவை சாஸ்திரப்படி ஆந்தை விஷமத் தனம் நிறைந்த- அறிவுள்ள பறவை. மனிதனைப் போன்ற சமதள முகம்; அமைதி, தீவிரம் உடைய கம்பீர முகச்சாயல்; சுற்றும் முற்றும் ஆராயும் விழிப்பு; சிமிட்டாமல் உற்றுப் பார்க்கும் இரு கண்கள்; பின்புறம் 270 டிகிரி வரை செலுத்தி நன்கு திரும்பிப் பார்க்க வல்ல கழுத்து. எனவே பறவைகளில் ஆந்தைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு "இரவின் அரசன்' என்றே பெயர். விவசாயத்துக்குத் தீங்கு செய்யும் எலி, பூச்சிகள், நத்தை போன்றவற்றை வேட்டையாடி அழிப்பதால் அதை "விவசாயியின் நண்பன்' என்றும் சொல்வார்கள்

No comments: