youtube

31 August 2016

சிவ தீட்சை பெறும் மாபாரதக் கண்ணன்:

ஸ்ரீகிருஷ்ணரின் திருத்துணைவியர் அனைவருக்கும் புத்திரப் பேறு கிட்டுகிறது (ஜாம்பவதி நீங்கலாக). இதைக் காரணமாகக் கொண்டு உபமன்யு முனிவரைச் சிறப்பிக்கத் திருவுள்ளம் பற்றுகிறார் கண்ணன். பிறை சூடும் பரமனிடம் புத்திரப் பேற்றினை வரமாகப் பெற்று வருகிறேன் என்று கூறியருளிச் செல்கிறார்.

இமய மலைச் சாரலில் ஓரிடத்தில் சிவ பூஜையை நியமத்துடன் புரிந்து வருகிறார். பணி புரியும் காவலர் வனம் முழுவதிலும் உள்ள பூக்களைக் கொய்து கண்ணனிடம் சேர்ப்பித்து வருகின்றனர். மற்றொரு புறம் அதே வனத்தில் தவம் புரிந்து வரும் உபமன்யு முனிவருக்கு பூஜிக்கப் பூக்கள் கிடைக்காது போகிறது.

தம் சிஷ்யர்களிடம் இது குறித்து வினவும் உபமன்யு முனிவர் அனைத்துப் பூக்களும் கண்ணனின் சிவ பூஜைக்கு காவலரால் பறித்துச் செல்லப் படுவதை அறிகிறார். புன்சிரிப்புடன் சிஷ்யர்களிடம் கண்ணன் பூஜித்த பூக்களைத் தம் பூஜைக்குக் கொண்டு வருமாறு பணிக்கிறார். சிஷ்யர்களும் கண்ணனிடம் சென்று இது பற்றி விண்ணப்பிக்கின்றனர்.

கண்ணன் முனிவரின் சிஷ்யர்களிடம் 'சிவ பூஜையில் ஒரு முறை பயன் படுத்திய பூக்கள் நிர்மால்யத் தன்மை பெறுகிறது. அம்மலர்களால் மீண்டும் பூஜிப்பது முறை அல்லவே?' என்று அறியாதது போல வினவுகிறார். அவர்களோ 'நாங்கள் எம் குருவின் ஆணையை ஏற்றே வந்தோம்' என்று புகல, கண்ணன் தாமே முனிவரிடம் கேட்டுக் கொள்வதகாக் கூறி அவர்களுடன் செல்கிறார்.

உபமன்யு முனிவரின் தரிசனம் பெற்றுப் பணிகிறார் ஸ்ரீகிருஷ்ணர்; தாம் முன்னர் எழுப்பிய அதே கேள்வியை இப்புவியிலுள்ளோர் நலம் பெரும் நோக்குடன் மீண்டும் முனிவரிடம் விண்ணப்பிக்கிறார். முனிவரும் கண்ணா 'சிவ தீட்சை பெறாதவர் சமர்ப்பிக்கும் மலர்களானது இறைவன் திருவடியில் சேர்வதில்லை; ஆகையால் தாம் பூஜித்தவை நிர்மால்யமாகாது' என விளக்கமளிக்கிறார்.

கண்ணனும் 'அவ்வாறெனில் தவத்தின் சிகரமென விளங்கும் தாமே எமக்கு குருவாக இருந்து சிவ தீட்சை தந்தருள வேண்டும்' என்று பணிகிறார். உபமன்யு முனிவரும் கண்ணனுக்கு முறையாக பாசுபத தீட்சை செய்வித்தருள்கிறார். பின்னர் நியமப் படி 11 மாதம் சிவபூஜையும் ஜபதபங்களும் புரியும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பரமன் பரமேஸ்வரியுடன் திருக்காட்சியளிக்கிறார்.

பின் ஜாம்பவதியும் சாம்பன் முதலான புதல்வர்களைப் பெற்று மகிழ்ந்தார் என்பது சரிதம். இனி நிகழ்வுடன் சில நுட்பங்களையும் காண்போம். இறை அவதாரங்கள் இப்புவியின் நலனுக்காக நிகழ்பவை; அவதாரங்கள் புரிந்தருளும் ஒவ்வொரு செயலும் ஆன்மாக்களுக்கு நல் அறத்தைப் புகட்டவே என்ற புரிதலுடன் இந்நிகழ்வினை அணுகுதல் வேண்டும்.

மாபாரதக் கண்ணன் இவ்வற்புத நிகழ்வின் மூலம் சிவ தீட்சையின் அவசியத்தை (தாமே நடத்திக் காட்டி) இப்புவிக்கு உணர்த்தி அருளியுள்ளான். தீட்சை என்பது ஆன்ம பயணத்துக்கான அனுமதிச் சீட்டு. இறைவனின் திருவடிகளில் ஆன்மாக்கள் நிலைப் பெற தீட்சை மிக அவசியமாகிறது.

மகாபாரதம் (அனுசாசன பர்வம்); சிவ புராணம்; லிங்க புராணம்; சிவமகா புராணம் ஆகியவை கண்ணன் சிவதீட்சை பெற்ற அற்புத நிகழ்வினையும், தீட்சையின் அவசியத்தையும் பதிவு செய்கின்றன (சிவாய நம)

No comments: