youtube

10 February 2016

தத்தாத்திரேயரும் பரசுராமரும்

தத்தாத்திரேயரும்  பரசுராமரும் 
பரசுராமரைப் பற்றிய  கதையைப் படிக்கும் முன் அவருடைய தந்தையின் பிறப்பையும் அறிந்து கொள்வது அவசியம். அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர் என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில் பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால் பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது. சத்யவதி கர்பமுற்றாள். அதைக் கண்ட சத்யாவதியின் தாயாருக்கு தானும் கர்பவதி ஆகி ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளும் கர்ப்பம் அடைந்தாள். தனது ஆசையை சத்யாவதிக்கும் கூறி இருந்தாள்.
சத்யாவதிக்கு திருமணம் ஆகி சில காலம் பொறுத்து அங்கு வந்த பிருகு முனிவரிடம் தனது தாயாரின் ஆசையும் கூறி இருவருக்கும் நல்ல குழந்தைப் பிறக்க அவருடைய அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் . அதைக் கேட்டு மகிழ்ந்த மாமனாரும் இரண்டு பாத்திரங்களில் சிறிது பாயசத்தை ஊற்றி அதை அவளிடம் தந்து விட்டுக் கூறினார் 'இதில் 1 என எழுதி உள்ள பாத்திரம் உனக்கு. 2 என எழுதி உள்ள பாத்திரம் உன் தாயாருக்கு. உங்கள் இருவருக்கும் நல்லபடியாக நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற மந்திரத்தை ஓதி வைத்து உள்ளேன். இதை நாளை குளித்து விட்டு நீயும் உன் தாயாரும் சாப்பிட வேண்டும். ஆனால் ஒன்றை கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தை மாற்றி விடாதே. அதில் கவனமாக இரு'. 
சத்யாவதியும் தன்  தாயாரிடம் சென்று அதைக் கூறினாள் . மறு நாள் காலை சத்யாவதி எழுந்திருக்கும் முன்பே அவளுடைய தாயார் எழுந்து விட்டாள். பாயசத்தைக் குடிக்க பாத்திரத்தை எடுத்தவளின் மனதில் சிறு சலனம். பிருகு முனிவர் தனது மருமகளுக்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தையை விட அதிக அழகான, அறிவுள்ள பிள்ளை பிறக்க வைக்க மந்திரம் ஓதி இருப்பாரோ என நினைத்தாள் . ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் தனது மகளுக்கு வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தை எடுத்துக் குடித்து விட்டாள். அதன்பின் குளித்துவிட்டு வந்த சத்யாவாதி தன்னுடைய தாயார் தனக்கு வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்து விட்டாளே   எனப் பதறியவாறு அவளிடம் அது பற்றிக் கேட்டதற்கு தான் தவறுதலாக அதை மாற்றிக் குடித்து விட்டேன் என அவளுடைய தாயார் கூறி விட்டாள்.  ஆகவே வேறு வழி இன்றி இன்னொரு பாத்திரத்தில் இருந்த பாயசத்தை சத்யாவதி குடித்தாள். மறுநாள் அங்கு வந்த பிருகு முனிவரிடம் சத்யாவதி  நடந்ததைக் கூறி அழுதாள். அவரும் அதைக் கேட்டு வருந்தினார். நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஆனால் என்ன செய்ய முடியும், சரி நடப்பது நடக்கட்டும் என கூறி விட்டு சத்யாவதிக்கு பிறக்க இருந்த குழந்தையின் குணங்கள் அவளது பேரனுக்கு போகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். சில நாட்களில் மகளும் தாயாரும் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தார்கள். சத்யாவதிக்கு  ஜமதக்னி முனிவரும் அவளுடைய தாயாருக்கு விஸ்வாமித்திரரும் பிறந்தார்கள். அதனால்தான் சாத்வீக குணம் கொண்ட சத்யாவதிக்கு அவளுடைய சாந்த குணத்தைக் கொண்ட ஜமதக்னி பிறந்ததினால் அவரால் காத்தவீர்யனை எதிர்த்து போராட முடியவில்லை.
காலம் ஓடியது. ஜமதக்னி முனிவர் வளர்ந்து பெரியவர் ஆனார். காலாகாலத்தில் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. ரேணுகா தேவி ஒரு முனிவரின் பெண்ணாக காட்சி தந்தார். அவர்களுக்கு சில குழந்தைகள் பிறந்தன. அதில் பரசுராமரும் ஒருவர். பிறந்த குழந்தைகளில் முதல்வர் பரசுராமர்.  பிருகு முனிவர் சத்யாவதிக்கு முன்னர் ஆசிர்வதித்ததைப் போல அவளுடைய பேரன் (சத்யாவதியின் மகனான ஜமதக்னிக்கு பிறந்தக் குழந்தை என்பதினால்) பரசுராமர் அதி பராக்கிரமசாலியும், புத்தி கூர்மையும் கொண்டவராக விளங்கினார். அவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஆனாலும் விதி சில சம்பவங்களை நிறைவேற்றியது.
ஒரு நாள் ரேணுகா தேவி குளிப்பதற்காக நதிக்கரைக்கு சென்று இருந்தாள். அப்போது எதேற்சையாக சற்று தொலைவில் அதே  நதியில் மற்றொரு நாட்டின் மன்னன் தனது மனைவியுடன் நீந்தி  விளையாடிக் கொண்டு இருந்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி காமத்துடன் சல்லாபம் செய்வதைக் கண்டவளின் மனம் ஒரு கணம் காம உணர்வால் தகித்தது. அடுத்த கணமே தனது கணவன் நினைவுக்கு வர அவசரம் அவசரமாக அங்கிருந்துக் கிளம்பிச் சென்றாள். வீடு வந்தவளின் முகத்தை நோக்கினார் முனிவர். அவள் முகத்தில் கற்பு களங்கப்பட்டு இருந்தது தெரிந்தது. தனது ஞான திருஷ்டியினால் நடந்ததை அறிந்து கொண்டார். உடனே சற்றும் காத்திருக்காமல் தனது அனைத்து பிள்ளைகளையும் அழைத்தார். ' கற்பை இழந்துவிட்ட இவள தலையை வெட்டி எறியுங்கள்' என ஆணையிட்டார். பரசுராமரைத் தவிர மற்றவர்கள் தமது தாயின் தலையை வெட்ட தயங்கினார்கள் என்பதினால் தந்தையிடம் இருந்து சாபத்தைப் பெற்றார்கள். ரேணுகா தேவி தலையை குனிந்தபடி நின்று இருந்தாள். பரசுராமர் வந்தார். அவரிடமும் தந்தை அதே செயலை செய்யுமாறு கூற சற்றும் தயங்காமல் தாயாரின் தலையை துண்டித்து எறிந்தார் பரசுராமர்.
அதைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜமதக்னி 'அன்பு மகனே....என் சொல்லை தட்டாமல் நான் கூறிய காரியத்தை உடனேயே செய்தவனே...உனக்கு என்ன வேண்டும்...கேள் தருகிறேன்' என்றார். அதுவே தருணம் என்று காத்திருந்த பரசுராமர் தனது தாயாரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க வேண்டும், மற்றும் சகோதரர்களின் சாபத்தையும் விலக்க வேண்டுமென வேண்டுகோள் விட்டார். முனிவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 'எத்தனை உன்னதமான பிள்ளை இவன். என் சொல்லையும் தட்டவில்லை. தாயார் மீதும் குடும்பத்தின் மீதும் எத்தனை பாசம் வைத்து உள்ளான்' என நினைத்தவர் 'ததாஸ்து' எனக் கூறி ரேணுகாவை பிழைக்க வைத்தார். பரசுராமரின் சகோதரர்களின் சாபத்தையும் விலக்கினார். உயிர் பிழைத்து எழுந்த ரேணுகா கணவனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். ஆமாம் அந்த நாடகம் எதற்காக நடந்தது. ரேணுகா அப்படிப்பட்டவளா? இல்லை...இல்லை... ரேணுகா அப்படி ஒரு நாடகத்தை நடத்திக் காட்டி இருக்காவிடில்  பரசுராமரின் நல்ல குணம் வெளியில் தெரிந்து இருக்காது. மேலும் ரேணுகா தேவி முன்னோர் காலத்தில் தனக்கு  இரண்டாவது பிறவி வேண்டும் எனவும் அதில்தான் தான் யார் என்பதை பரசுராமர் மூலம் உலகிற்கு உணர்த்த வேண்டும் எனவும் முடிவு செய்து இருந்தாள். அதை நடத்திக் காட்ட  இதைவிட வேறு என்ன சந்தர்ப்பம் கிடைக்கும்?
இவர்கள் இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான் காத்தவீர்யன் கதையில் கூறியது போல காத்தவீர்யன் வந்து ஜமதக்னியின் பசுவை கவர்ந்து கொண்டு போனதும் பரசுராமர் அவனைக் கொன்றதுமா காட்சிகள் நடந்தேறின. காத்தவீர்யன் அழிக்கப்பட்டப் பின் அவனுடைய ஆட்கள் ஆத்திரத்துடன் இருந்தார்கள். தம்மால் பரசுராமருடன் நேரிடையாக மோத முடியாது என்பது அவர்களூக்குத் தெரியும். ஆகவே அவர் இல்லாத தருணத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். பேடித்தனமாகவே அவரை பழி வாங்க வேண்டும் என காத்திருந்தார்கள் . காலம் ஓடியது. ஒரு நாள் பரசுராமர் வீட்டில் இல்லை. அவர் வருவதற்கு நேரம் ஆகும் என்பதை தெரிந்து கொண்ட காத்தவீர்யனின் சேனையினர்  ஜமதக்னியின் ஆசிரமத்தில் நுழைந்தார்கள். அனைத்துப் பொருட்களையும் நாசப்படுத்தினார்கள். அவரை இழுத்துப் போட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ரேணுகா தேவி அலறினாள். அவரை விட்டு விடுமாறு எத்தனைக் கெஞ்சியும் கிராதகர்கள் அவரை விடவில்லை. கெஞ்சிய அவளையும் அவமானப்படுத்திவிட்டு ஓடினார்கள்.
ரேணுகா ;பரசுராமா...பரசுராமா; என இருபத்தி ஒரு முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். அவள் அலறல் தூரத்தில் இருந்த பரசுராமரின் காதுகளில் ஈட்டிப் போல வந்து துளைத்தன. ஓடோடி வந்தார் பரசுராமர். நடந்து முடிந்திருந்த அலங்கோலங்களைக் கண்டார். பிரமை பிடித்துப் போய்  அமர்ந்து இருந்த தாயாரைக் கண்டார். மடிந்துக் கிடந்த தந்தையைப் பார்த்துக் கதறினார் ' தந்தையே என்னால்தானே உங்களுக்கு இப்படி நடந்தது. இனி அவர்கள் ஒருவரையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டேன்' என வெறி பிடித்துக் கத்தியவர் வீட்டில் கிடந்த அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டார். தனது கோடாலியை தோளிலே வைத்துக் கொண்டு 'அந்த ஷத்ரியர்களை வேட்டை ஆடிவிட்டு வருகிறேன்....அதுவரை இவை இப்படியே இருக்கட்டும்' என வெறியோடு கிளம்பிச் சென்றார்.
வெற்றி மிதப்பிலே சென்று கொண்டு இருந்த ஷத்ரிய சேனயினரை கண்டு பிடித்தார். அவர்களை துரத்தலானார். ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும் தேடித் தேடி பிடித்துக் கொன்றார். ஷத்ரிய வேட்டை தொடர்ந்தது. அப்படியும் அவர் வெறி அடங்கவில்லை. கண்களில் தெரிந்த ஒரு ஷத்ரியனையும் விட்டு வைக்கவில்லை. வெறி பிடித்த வேங்கைப் போல அனைவரையும் வெட்டி சாய்த்தப்  பின் வீடு திரும்பினார். தந்தையின்  உடலை  மடி மீது கிடத்திக் கொண்டு புலம்பினார் ' தந்தையே எத்தனை பராக்கிரமசாலியாக இருந்தும் உங்களைக் காக்க முடியவில்லையே... என் வாழ்கையில் இனி எனக்கு என்ன இருக்கின்றது?...' என அழுது புலம்பிய மகனை துக்கத்தில் மிதந்து கொண்டு இருந்த தாயார் ரேணுகா சாந்தப்படுத்தினாள் . ' ஆனது ஆகி விட்டது மகனே...இனி அடுத்ததாக இறுதிக் காரியத்தை நடத்தி முடி' என்றாள்.
சரி என எழுந்தவனிடம் தீர்மானமாக ரேணுகா கூறினாள்  ' பரசுராமா...உன் தந்தையின் இறுதி காரியத்தை இங்கு செய்யக் கூடாது. போ...போய் ஒரு காவடியை தயார் செய்து கொண்டு வா... ஒரு புறம் உன் தந்தையையும், மறுபுறம் என்னையும் வைத்துக் கொண்டு நடந்து செல். எந்த இடத்தில் ஆசரி 'நில்' என்று கூறுகின்றதோ அங்கு உன் தந்தைக்கு வேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடி. நானும் அவர் சிதையிலே வீழ்ந்து மடிந்துபோக  உள்ளேன். ஆகவே இருவருக்கும் சேர்த்து அங்கேயே ஈமக் கடன்களை முடித்து விடு இதுவே  என் ஆணை' என்றவளின் கட்டளையை ஏற்று ஒரு காவடியை தயார் செய்து கொண்டு வந்தார் பரசுராமர்.
தனது தாயாரின் கட்டளைப்படி அவர்கள் இருவரையும் அதில் வைத்துக் கொண்டு காடுகளில் பல பகுதிகளிலும் நடந்து சென்று கொண்டே இருந்தார். அவர் பல மைல் தொலைவு தூரம் சென்றும் நில் என்றக் கட்டளை வரவில்லை. ஆனால் பரசுராமரும் சோர்வு அடையவில்லை. பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அந்த நிலையில் அவர் மலைப் பகுதியில் சென்றபோது  தத்தாத்திரேயர் இருந்த பகுதியை அடைந்தார். அப்போது  'நில் மேலும் போகாதே' என்றக் குரல் ஒலித்தது. யார் குரல் கொடுத்தார்கள் என்று திரும்பிப் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அவர் யாராக இருக்கும் என யோசனை செய்தவர் தாயாரையே கேட்கலாம் என எண்ணி தாயாரின் முகத்தை நோக்கினார். அவள் வாயில் இருந்து மெல்லிய சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தது. காவடியை கீழே வைத்து விட்டு அவள் அருகில் சென்று பார்த்தார். அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வந்து கொண்டு இருந்தன. 'மகனே...உனக்கு அடிக்கடி உன் தந்தை போதிப்பாரே தத்தரைப் போய் பார்....தத்தரைப் போய் பார் என்று...அவருடைய ஆசிரமம்தான் அருகில் உள்ளது....போ..உள்ளே போய் அவரை தரிசித்து எங்களுக்கு எப்படி இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் எனக் கேட்டு அவர் கூறுமாறு கிரியைகளை  செய். அவர் கிடைக்கவில்லை என்றாள் அங்குள்ள நெல்லி மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை தியானம் செய். அவர் எங்கு இருந்தாலும் உடனே ஓடி வருவார் ' என்றாள்.
தாயாரின் சொல்லை ஏற்று பரசுராமர் ஆசிரமத்திற்குள் சென்று தத்தாத்திரேயரை தேடினார். ஆனால் அதற்கு மாறாக அலங்கோலமான நிலையில், பெண்களுடன் சல்லாபம் செய்து கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். உள்ளே சுருட்டு வாசனை....சாராய நெடி மூக்கை துளைத்தது'. ஆனால் பரசுராமரா சளைத்தவர். அவருக்கு  தத்தரைப் பற்றி ஏற்கனவே பலரும் கூறி இருந்ததினால் தனது எதிரில் அந்த நிலையில் காட்சி தருபவர் தத்தாத்திரேயராகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீர்மானமாக இருந்தது. அவர் அருகில் சென்று அவரை சேவித்தப் பின்னர் தனது தந்தையின் இறுதிக் கடனை எப்படி செய்வது என அவரிடம் அறிவுரைக் கேட்கவே தான் அங்கு வந்துள்ளதாக பரசுராமர் கூற அந்த அலங்கோல மனிதர் கூறினார் 'இறுதிக் கடனைப் பற்றி எனக்கு என்னடா தெரியும்...வேண்டுமானால்  நீயும் இரண்டு மொந்தைக் கள்ளைக்  குடித்துவிட்டு என்னுடன் இங்கு அமர்ந்து கொள் . அதை விடுத்து இறுதிக் கடன்...காரியம் என என்னிடம் வந்தால் நான் என்னடா செய்வது' என ஏளனமாக பேசினார். பரசுராமருக்கு வைராக்கியம் அதிகம். அசைந்து கொடுக்கவில்லை. அவர் கூறினார் 'ஸ்வாமி தயவு செய்து நாடகத்தை தொடராதீர்கள்...உங்களை கேட்டு நீங்கள் கூறியபடித்தான் என் தந்தையின் இறுதிக் காரியத்தை செய்ய வேண்டும் என என்னுடைய தாயார் கூறி உள்ளார். அதனால் அவளையும் இங்கே அழைத்து வந்துள்ளேன்' என்றார்.
அதைக் கேட்ட தத்தாத்திரேயர் கேட்டார் 'என்ன கூறினாய்...என்னைக் கேட்டு இறுதிக் கடனை செய்யுமாறு உன் தாயார் கூறினாளா...அவளும் இங்கு வந்து இருக்கிறாளா  ...யாரடா உன் தாயார்.. அவளை நானும் பார்க்கிறேன்' என ஆச்சர்யத்துடன் கூறியபடி தனது உண்மை உருவிலே எழுந்தார் தத்தர் . அவரை சுற்றி பெரிய ஒளி  வெள்ளம். அனைத்து நாடகக் காட்சிகளும் மறைந்து இருந்தன. ஜ்யோதிஸ்வரூபமாக பரசுராமர் எதிரில் தத்தர் நின்று கொண்டு இருந்தார். 'வா...சென்று உன் தாயாரைப் பார்க்கலாம்' என பரசுராமரை அழைத்துக் கொண்டு சென்றவர் ரேணுகா மாதாவைக் கண்டார். அவ்வளவுதான் ' ஹே ஜகன்மாதா' எனக் கூறியவாறு தத்தாத்திரேயர் அவளை சென்று வணங்கினார்...தாயே ஜகன்மாதா...என் அன்னையே...எனப் பலவாறாகக் கூறி அவளை தோத்திரம் செய்யலானார். அவர் முன்னால் அமைதியாக சலனம் இன்றி கண்களை மூடியபடி ரேணுகா அமர்ந்து இருந்தாள். நடந்து கொண்டு இருந்ததைக் கண்ட பரசுராமர் அதிர்ந்துபோய், வாயடைத்து நின்றார்.
பரசுராமரை அழைத்த தத்தாத்திரேயர் அவரை அனைத்து தீர்த்தங்களிலும் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அதன் பின் அவருக்கு அவர் தந்தைக்கு இறுதிக் கடன்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறிவிட்டு சிதைக்கு தீ மூட்டச் சொன்னார். காவடியில் இருந்து இறங்கிய ரேணுகா தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். சிதையில் தீ எரிந்து கொண்டு இருந்தபோதே அவள் அதில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். மறைந்து விட்டாள். தத்தாத்திரேயர் அமைதியாக நடந்த அனைத்தையும் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். ரேணுகா தேவி தான் இன்னொரு பிறவி எடுத்து இந்த இடத்தில் முடித்துக் கொண்டது ஏன்?  காரணம் என்ன?
  • தத்தாத்திரேயர் வரம் பெற்ற காத்தவீர்யனை அழிக்க வேண்டுமானால் அவரே வணங்கும் பராசக்தி மூலமே அது நடக்க இயலும் என்பதினால் மாயையாக அவள் தன்னை ஜமதக்னியின் மனைவியாக காட்டியவாறு இருக்க வேண்டும்.
  • ஜமதக்னியின் உண்மையான மனைவியாக இருந்தது அவள் அனுப்பிய ஒரு பூத கணமே. அப்போதுதான் காத்தவீர்யனைக் கொல்ல வேண்டிய நாடகத்தை நடத்தி முடிக்க முடியும்.
  • ஜமதக்னி யார்? பிறப்பால் மனித உடலை எடுத்து இருந்தாலும் அவரும் சிவபெருமானின் ஒரு பூதகணமே.
  • மும்மூர்த்திகள் வணங்கும் அவள் பராசக்தி என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். அதை மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் மூலமே அதையும் தெரியப்படுத்த வேண்டும். 
  •  அவளது தலையை ஏன் ஜமதக்னி முனிவர் வெட்டுமாறு கூறினார்? அதற்குக் காரணம் அப்போதுதானே அந்த உடலில் உள்ள பூதகணம் மடியும், தானும் ஒரு மனித உருவில் அங்கு இருந்து நாடகத்தை நடத்த முடியும்.
நாடகம் நடந்து முடிந்தது. தத்தாத்திரேயர் அறிவுரைப்படி அனைத்து காரியங்களையும் செய்து முடித்தப் பின் பரசுராமர் காத்தவீர்யனின் ஆட்கள் ஜமதக்னியைக் கொன்றபோது இருபத்தி ஒருமுறை மார்பில் அடித்துக் கொண்டு தன்னை அழைத்த தாயாரின் நினைவாக பூமியின் இருபத்தி ஒரு பகுதிகளிலும் சென்று ஷத்ரியர்களை வதம் செய்தார். இருபத்தி ஒரு முறை முடிந்ததும் அவர் மனதில் துயரம் தோன்றியது. இது என்ன வாழ்கை. எத்தனை மனிதர்களைத்தான் அடுக்கடுக்காய் கொன்று தீர்ப்பது என மனதில் வெறுப்பு ஏற்பட மீண்டும் தத்தாத்திரேயரிடம் வந்து சரணடைந்தார். வழியில் ரேணுகா தேவியும் ஜமதக்னி முனிவரும் அவர் முன் தோன்றி அவர் செய்த கொலைகளின் பாவத்தை அழிக்க தத்தாத்திரேயரிடம் சென்று அவருடைய அறிவுரை பெற்று ஒரு யாகத்தை செய்யுமாறு கூறி விட்டு மறைந்தார்கள். அந்த யாகம் என்ன, எப்படி செய்வது எனப் புரியாமல் தத்தரிடம் சென்றார்.
தத்தாத்திரேயரிடம் சென்று நடந்தவற்றைக் கூறி விளக்கம் கேட்க தத்தர் கூறினார் ' பரசுராமா, கவலைப் படாதே. எந்த ஒரு செயலுக்கும் மாற்று மார்க்கம் உண்டு. அவர்கள் உன்னை செய்யச் சொன்ன யாகத்தின் பெயர் ரேணுகா யாகம். அதை நீ செய்து முடிக்கும்வரை உனக்கு நானே துணையாக இருந்து உனக்கு வழி காட்டுவேன்' எனக் கூறினார். அந்த யாகம் செய்ய வேண்டுமானால் பக்கத்தில் மனைவி அமர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பரசுராமரோ மனம் ஆகாதவர் . ஆகவே மனைவிக்கு பதில்  மனைவி ஸ்தானத்துக்கு இணையாக ஒரு  தங்கத்திலான ஒரு பெண் பொம்மையை பரசுராமர் பக்கத்தில் வைத்துக் கொண்டு யாகத்தை வேறு சிறப்பாக செய்து முடிக்க வைத்தார். யாகத்தில் தத்தாத்திரேயரே ஒரு ருத்வியாக வந்து அமர்ந்து கொண்டு பங்கேற்க  காஷ்யப முனிவர் முன்னிலையில் அனைத்தும் நன்றாக நடந்து முடிந்தது. அதில் பங்கேற்ற ரிஷி முனிவர்களுக்கு ஒரே குழப்பம். தத்தர் ஏன் அடிக்கடி ரேணுகா...ரேணுகா என முணுமுணுக்கின்றார்?...அவருக்கும் ரேணுகாவிற்கும் என்ன சம்மந்தம்? அதற்கு மேல் யாகத்தில் பரசுராமரிடம் அதை செய்...........இதை செய் எனக் கூறி வழி காட்டியவண்ணம்  உள்ளாரே...பரசுராமர் மீது இவருக்கு  என்ன அக்கறை? கேள்விகள் அவர்களை குடைந்து எடுத்தன. ஆனால் பதில்தான் தெரியவில்லை. யாகத்தில் வந்த ருத்விகளுக்கும் நிறைய தானங்கள் கிடைத்தன. ஆகவே அனைவரின் சார்பாகவும் தத்தாத்திரேயரிடம் பரசுராமரே அவர்களது சந்தேகத்திற்கான விடையைக் கேட்டார். பரசுராமர் தத்தரிடம் கேட்டார் ' ஸ்வாமி, என் பெற்றோர்கள் சொர்கத்துக்குப் போகும் முன் என்னை வழியிலே சந்தித்து தத்தாத்திரேயரிடம் இறுதிக் காரியங்களை செய்ய அறிவுரைக் கேட்டு அவர் கூறுவது போல செய் என்றார்கள். மேலும் என்னை உங்களிடம் தீட்ஷை பெற்று உங்களுடைய சிஷ்யராகவே ஆகுமாறு கூறினார்கள். என் தாயாரின் பெயரைக் கேட்ட உடனேயே நீங்கள் உடனே எழுந்து வந்து அவளை வணங்கித் துதித்தீர்கள். அப்போதே நினைத்தேன் எத்தனை பெரிய யோகா புருஷர் நீங்கள் ஏன் அவளை வணங்க வேண்டும்? அதற்கான காரணங்களை எங்களுக்கு விளக்கினால் நாங்கள் மன அமைதி பெறுவோம் ' . அவர் கேட்டதைக் கண்ட தத்தரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அமைதியாக அவர்களுக்கு விளக்கினார்.
'பரசுராமா, உங்களுக்கும் என்னுடைய தாயாருக்கும் என்ன பந்தம் என்று கேட்டாய் அல்லவா...கூறுகிறேன் கேள். உன்னுடைய தாயாரான ரேணுகா ஸ்தூல சரீரமும் நிராகாரம் என்ற ஜேஷ்ட சரீரத்தையும் கொண்டவள். அவளுக்கு இரண்டு உருவங்கள் உள்ளன. அவளே  உலகு அனைத்தையும் ஆளும் லோகமாதா. அவளுக்கு  எல்லாமே அவளேதான்.  தாய், தந்தை, கணவன் , மனைவி, சொந்த பந்தம் என அனைத்துமே அவளுக்கு அவளேதான். அதில் ஒரு உருவமாக உன்னுடைய தாயார் இந்தப் பிறவியில் உனக்கு தாயாக பிறக்கக் காரணம் லோகத்தின் நன்மையைக் கருதி அனைவரையும் நல்வழிப்படுத்தவே. காத்தவீர்யன் முன் பிறவியில் விஷ்ணுவிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஜென்மத்தில் பிறக்க உன்னையே விஷ்ணு தனது அவதாரமாக ஜமதக்கினிக்கு பிறக்க வைத்து அவனை அழித்தார்.
உன் அன்னை ரேணுகா ஒரு ஏக மாதா ...அவளே சந்தியா தேவி எனும் காயத்ரியும் ஆவாள்...காலமற்ற காலத்தில் வாழ்பவளான  அவளை வணங்குவதற்கு காலமோ நேரமோ எதுவுமே தேவை இல்லை. அவளை மூன்று வேளைகளிலும் வணங்குபவர்கள் எண்ணற்ற ஆனந்தத்தை அடைவார்கள். எல்லா காலத்திலும் நிறைந்து இருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் சந்தி என்பதின் மூலம் சந்தியாவந்தனம் செய்யலாம். சந்தி என்றால் காலம். ஆனால் அதற்காக அவளை மூன்று வேளை மட்டும் வணங்க வேண்டும் என்பது அல்ல சாரம். அத்தனை உயர்வானவள் அவள். அதனால்தான் மானிட உருவில் வந்துள்ள நான் கூட அவளை வணங்குகின்றேன். என்னையும் படைத்தவளே அந்த மாகா சக்தியான பராசக்தி. அவளின் ரூபமே காயத்ரியும். அவளே உன் அன்னையாக காட்சி தந்த ரேணுகா தேவியும். அதோ  தெரிகிறதே ஒரு குளம்,  அதில்தான் உன் தாயார் நீராடுவாள். அதனால்தான் அதை ரேணுகா தீர்த்தம் என்கிறோம். இதோ தெரிகின்றதே நெல்லி மரம், அதன் அடியில்தான் உன் தாயார் அமர்ந்து இருப்பாள். நீ எங்கு சென்று ஒய்வு எடுத்தாலும் கிடைக்காத மன நிம்மதி அந்த மரத்தடியில் நின்றாலே கிடைக்கும். உனக்கு நினைவு இருக்கின்றதா? உன் தாயார் உனக்குக் கூறினாளே, யாகம் முடிந்ததும் அந்த நெல்லி மரத்தடியில் சென்று அமர்ந்து கொள் என்று. அதற்குக் காரணம் இதனால்தானப்பா ' எனப் பலவாறு ரேணுகா எனும் ஆதி பராசக்தியின் பெருமைகளை கூறிக் கொண்டே இருந்தார். அப்படி அவர் கூறிக் கொண்டே இருக்கையில் அந்த நெல்லி மரத்தடியில் ரேணுகாதேவி ஜகத்ஜோதியாகத் தோன்றினார். தத்தாத்திரேயர் 'அன்னையே...பராசக்தி.....ஜகன்மாதா.........எனக் கூறியவாறு அவளை தோத்திரம் செய்யத் துவங்க சுற்றிலும் இருந்த ரிஷி முனிவர்கள் மெய் மறந்து நின்று அந்த அற்புதமான காட்சியைக் கண்டு களித்தார்கள். அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது தத்தாத்திரேயர் யார் என்பதும் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் என்ன சம்மந்தம் என்பதும்.
யாகம் முடிந்து அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் தத்தாத்திரேயரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பரசுராமரும் அங்கேயே தங்கி இருந்தவாறு தத்தாத்திரேயைன் அறிவுரைப்படி தியானங்களை செய்து கொண்டும் அந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டும் காலத்தைக் கழித்தார். ஆனாலும் அவர் முழுமையாக தத்தரிடம் அடைக்கலம் அடையவில்லை என்பது அவருக்கே தெரியவில்லை. அவர் மனதில் மீண்டும் அமைதி இன்மை தோன்றியது. காடுகளில் அலைந்து திரிந்து கொண்டு இருந்தவர் வெகு அபூர்வமாகவே மற்றவர்கள் கண்கள் முன் தோன்றும் சம்வார்த்தா என்ற முனிவரிடம் சென்று தனது மனத் துயரைக் கூறினார். அந்த முனிவர் அவரைப் பார்த்து சிரித்தபடிக் கூறினார் 'பரசுராமா...உன் நிலையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். கையிலே விளக்கை வைத்துக் கொண்டே வெளிச்சத்தைத் தேடி அலைகிறாயே' எனக் கூறி விட்டுச் சென்றார். அப்போதுதான் பரசுராமருக்கு யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. ஆகா...என்ன தவறு செய்துவிட்டேன். என் தாய் தந்தைக் கூறியும் தத்தரிடம் முழுமையாக நான் அடைக்கலம் ஆகவில்லையே என்பதை உணர்ந்தவர் விரைவாக தத்தரிடம் சென்று அவள் கால்களில் விழுந்தார். தனக்கு மன அமைதியே இல்லை என்றும் அவர்தான் தனக்கு மன அமைதிக்கு வழி காட்ட வேண்டும் எனவும் கூறி ஒரு குழந்தைப் போல கண்ணீர் விட்டு அழுதார். தத்தர் அவரை தேற்றி எழுப்பினார்.
'கவலைப்படாதே பரசுராமா...நீ இங்கேயே ஒரு குடிலை அமைத்துக் கொண்டு தியானத்தை செய்' எனக்  கூறி அவருக்கு சில மந்திரங்களை உபதேசித்தார். அவரும் தத்தர் கூறியபடியே அந்த மலைப் பிரதேசத்தில் பல காலம் தங்கி இருந்தவாறு  தவம் செய்யலானார். அவருக்கு தத்தாத்திரேயேர் செய்த உபதேசமே திருபுரா ரகசியம் என்பது என்று கூறுகிறார்கள். திருபுரா ரகசியம் என்பது திருபுரசுந்தரியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்கர, யந்திர வழிபாடு செய்வதே. அந்த திருபுர சுந்தரி யந்திரம் மிக சக்தி வாய்ந்தது. அதை செய்தவாறு பல காலம் அங்கிருந்து மன அமைதி பெற்றார் பரசுராமர்

16 December 2012

சிதம்பர ரகசியம்

பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

சிதம்பரம் - சிதம்பர ரகசியம் - சிதம்பரம் அனந்தீஸ்வரர் - சிதம்பரம் ஆத்மநாதசுவாமி - சிதம்பரம் ஆலயம் - சிதம்பரம் இளமையாக்கினார் - சிதம்பரம் காயத்ரி அம்மன் - சிதம்பரம் கோயில் சிறப்பு - சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள்சிதம்பரம் தேவாரம் - சிதம்பரம் நடராசர் நாட்டியம் - சிதம்பரம் வரலாறு - தில்லை காளி

No comments: